மலாய்க்காரர் மானம் காக்க இனவாத சுலோகங்கள்தான் கிடைத்தனவா அம்னோவுக்கு?

azminசிலாங்கூர்   மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  நேற்று கோலாலும்பூரில்  நடந்த  சிகப்புச்  சட்டைப்  பேரணியை  நினைத்து  வெட்கப்படுகிறார்.

“சிகப்புச்  சட்டை  அணிந்த  மலாய்க்காரர்கள்- ஆண்களும்,  பெண்களும்- இனவாத  சுலோகங்கள்  முழக்கமிடுவதையும்  வெறுப்புணர்வை  வெளிப்படுத்துவதையும்  கண்டு  என்னுள்  ஏற்பட்ட  வெட்கக்கேட்டையும்  அருவறுப்பையும்  வருணிக்க  வார்த்தைகள்  இல்லை.

“இதுதான்  மலாய்க்காரர்  மானத்தை  நிலைநாட்ட  அம்னோவுக்குத்  தெரிந்த  சிறந்த  வழியா?”,  என  அஸ்மின்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

“பேருந்துகளில்  ஆயிரக்கணக்கான   பெல்டா  குடியேற்றக்காரர்களையும்  கட்சி  உறுப்பினர்களையும்  அழைத்து  வந்து  கட்டவிழ்த்து  விடுவது……

“பிரதமருக்கு  ஆதரவு  தேட அம்னோவுக்குக்  கிடைத்த  சிறந்த  வழி   இதுதானா?”.

பிகேஆர்  துணைத்  தலைவருமான  அஸ்மின்,  இஸ்லாம்  இனவாதத்தை  அனுமதிப்பதாகக்  கூறிய  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  அனுவார்  மூசாவையும்  சாடினார்.