பாஸ் அம்னோவின் தந்திரங்களைக் கையாண்டு முஸ்லிம்-அல்லாத தலைவர்களுக்குக் குழி பறிக்க முயல்கிறது

tacticபாஸ்,  டிஏபி-யைச்  சாடுவதற்கு   அம்னோவின்  தந்திரங்களைக்  கடைப்பிடிக்கிறதாம். கடந்த  பொதுத்  தேர்தலில்  டிஏபி  வென்று  ஆட்சி  அமைத்தால்  அது  போர்ட்  டிக்சனில்  விமானத்  தளம் அமைக்க  இடம்   ஒதுக்கித்தர  வேண்டும்  அதற்குக்  கைம்மாறாக  இஸ்ரேல்  யுஎஸ்300 மில்லியன் (ரிம1.2 பில்லியன்)  கொடுக்கும்  என்று  பேரம்  பேசப்பட்டதாகக்  கூறப்படுவதும்   அந்த  அடிப்படையில்  அமைந்ததுதான்  என  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

அதை  வன்மையாக  மறுத்த  அவர்,  அது  “தீய  நோக்கத்துடன்  சொல்லப்பட்ட  பொய்  என்பதுடன்  அவதூறான  குற்றச்சாட்டும்  ஆகும்”  என்றார்.

அவ்வாறு  கூறிக்கொண்டிருப்பதாகக்  கூறப்படும்  ரசாலி அப்துல் ரஹ்மான்  தம்மிடம்  பணி  புரிந்தவர்  அல்ல  என்றும்  அவருக்கு  முக்கிய  பணி  என்று  எதுவும்  கொடுக்கப்பட்டதில்லை  என்றும்  சொன்னார்.

“இஸ்ரேலியர்களை  நாங்கள்  பார்த்ததுகூட  இல்லை என்கிறபோது  ஏன்  அபாண்டமாக  பழி  போடுகிறார்கள்?”, என  லிம் வினவினார்.

“இஸ்ரேலியர்களைச்  சந்தித்து  கைகுலுக்கிய  தலைவர்கள்  எல்லாம்  இருக்கிறார்கள்.  அது  ஒரு  பிரச்னையாக  தெரியவில்லையா?”, என்றவர்  கேட்டார்.

மலாய்க்கார  முஸ்லிகளிடையே  டிஏபி-இன்  மதிப்பைக்  குறைப்பதற்காகவே  இப்படிப்பட்ட  அபாண்டமான  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்படுவதாக   லிம்  சொன்னார்.

இப்படிப்பட்ட  குற்றச்சாட்டுகள்  முஸ்லிம்- அல்லாத  தலைவர்கள்மீது  வெறுப்புணர்வை  உருவாக்கும்  என்றாரவர்.

டிஏபி-இடம்  ரிம1.2 பில்லியனுக்குப்  பேரம்  பேசப்பட்டதாகக்  குற்றம்  சாட்டும்  பாஸ்  அதற்கான  ஆதாரங்களைக்  காண்பிக்க  வேண்டும்  இல்லையேல்  சட்ட  நடவடிக்கையை  எதிர்நோக்க  வேண்டியிருக்கும்  என  லிம்  எச்சரித்தார்.

“இப்படி  அவதூறாக  பழிபோடுவோருக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுக்கும்படி   என்  வழக்குரைஞர்களிடம்  கூறி  இருக்கிறேன்.

“இப்படிப்பட்ட  பொய்களைப்  பரப்பும்  செய்தித்தாள்களுக்கு  எதிராகவும்  நடவடிக்கை  எடுப்போம்”, என்றாரவர்.