சரவாக் ரிப்போர்ட்: நஜிப், எங்கள் மீது வழக்குத் தொடருங்கள்

srreportசரவாக் ரிப்போர்ட் வலைத்தளம் பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறது என்று பிரதமர் நஜிப் கருதினால், அந்த வலைத்தளத்திற்கு எதிராக வழக்குத் தொடருமாறு சரவாக் ரிப்போர்ட் பிரதமருக்கு இன்று சவால் விட்டுள்ளது.

மலேசிய பல்லூடக மற்றும் தகவல் தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) சரவாக் ரிப்போர்ட் மற்றும் இன்னொரு வெளிநாட்டு வலைத்தளமான ஏசியா சென்டினல் ஆகியவற்றுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து இச்சவால் விடப்பட்டது.

அத்துறையின் அமைச்சர் சாலே சைட் கெருவாக் தேசியத் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பும் வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கும் நோக்கத்தில் இது குறித்த சட்டங்களை மறுஆய்வு செய்யவிருப்பதாக கூறியிருந்தார்.

ஏன் இந்த முரட்டுத்தனமான நடவடிக்கைகள்? நஜிப் அவர் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு பேசாமல் சரவாக் ரிபோர்ட் மீது ஒரு சுயேட்சையான நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்று சரவாக் ரிப்போர்ட் நஜிப்புக்கு ஆலோசனை கூறியுள்ளது.

அவ்வாறு வழக்குத் தொடர்ந்தால் சாட்சியங்களைக் கூர்ந்து ஆராயவும், சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவும் இயலும் என்று சரவாக் ரிப்போர்ட் கூறியுள்ளது.

“நஜிப்பும் அவரது ஆதரவாளர்களும் கூறிவருவது போல் சரவாக் ரிப்போர்ட்டும் இதர ஊடகங்களும் “பொய்” கூறுகின்றன என்றால், அவர்கள் செய்ய வேண்டிய சுலபமான காரியம் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டியதுதான்”, என்று சரவாக் ரிபோர்ட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினால், வலைத்தளங்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு நிகரானதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

“அவர் பதவி துறப்பதற்கான நேரம் இது”, என்றும் அது கூறியுள்ளது.