மகாதீரும் அவரது துணைவியாரும் அம்னோவிலிருந்து விலகினர்

 

MquitsUMNOமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா அலியும் பிரதமர் நஜிப்புக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து அம்னோவிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

“அம்னோ இப்போது அம்னோவாக இல்லை. ஆகையால் நான் அம்னோவிலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறேன். அது நஜிப்பை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒரு கட்சி.

“அவ்வாறான ஒரு கட்சியில் நான் ஓர் உறுப்பினராக இருக்க முடியாது”, என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

பதவியிலிருக்கும் ஒரு பிரதமரை எதிர்த்து மகாதீரும் அவரது துணைவியாரும் அம்னோவிலிருந்து விலகிக்கொண்டது இது இரண்டாவது முறையாகும்.

2008 ஆம் ஆண்டில், பிரதமர் அப்துல்லா படாவியின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருவரும் கட்சியிலிருந்து விலகினர். 2009 ஆம் ஆண்டில் படாவி பதவி விலகிய பின்னர் அவர்கள் அம்னோவிற்கு திரும்பி வந்தனர்.

தாம் புதியதோர் கட்சியை அமைக்கவோ, இருக்கும் கட்சிகளில் சேரவோ எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று மகாதீர் மேலும் கூறினார்.