புவா: பல பில்லியன் டாலர் மோசடியை மூடிமறைத்த அருள் கந்தாமீது விசாரணை நடத்துவீர்

aabar1எம்டிபி- ஐபிஐசி- ஆபார் சம்பந்தப்பட்ட  பல பில்லியன்  டாலர்  விவகாரத்தை  மூடிமறைத்ததற்காக  1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா கந்தசாமிமீது  விசாரணை  நடத்த  வேண்டும்  என்று  டிஏபி  எம்பி  டோனி  புவா  கூறியுள்ளார்.

மொத்தம்  யுஎஸ்$3.51 பில்லியன்  பிரிட்டிஷ்  வெர்ஜின்  தீவுகளில்  பதிவுசெய்யப்பட்ட  ஆபார்  இன்வெஸ்ட்மெண்ட்  பிஜேஎஸ்(ஆபார்  பிவிஐ)-க்கு  மாற்றிவிடப்பட்டது  அருள்  கந்தா   1எம்டிபிக்குப் பொறுப்பேற்பதற்கு  முன்பு  என்பதை  புவா  ஒப்புக்கொண்டார்.  என்றாலும்  அருள்  பொய்யான  பிவிஐ  பற்றி  அறிந்தே இருந்தார்  என்றாரவர்.

ஆபார்  பிவிஐ  2015  ஜூனில்  அதாவது  அருள்  கந்தா  அரசுக்குச்  சொந்தமான  நிறுவனத்துக்குப்   பொறுப்பேற்ற  ஆறாவது  மாதத்தில்  தன்  செயல்பாட்டை  நிறுத்திக்  கொண்டது.

1எம்டிபி-இடமிருந்து  மொத்தம்  யுஎஸ்$3.51 பில்லியனைப்  பெற்றுக்கொண்ட  ஒரு  நிறுவனம்  திடீரென்று  இல்லாமல்  போனது  பற்றி  அருள்  கந்தா  எப்படி  அறியாதிருக்க  முடியும்  என்று  புவா  வினவினார்.

ஆபார்  பிவிஐ  இப்போது  செயல்படவில்லை  என்பதால்  வெளிநாட்டுக்கு  அனுப்பப்பட்டதாகக்  கூறப்படும்  யுஎஸ்$3.51  பில்லியனுக்கு  இப்போது  கணக்கு  இல்லை,  அது  காணாமல்போன  பணமாகிவிட்டது.

“1எம்டிபி  ஆபார் பிவிஐ-உடன்  கையொப்பமிட்ட  எல்லா உடன்பாடுகளும்  செல்லாமல்  போய்  விட்டதாக  தலைமைக்  கணக்காய்வாளர்  கூறுகிறார்.

இத்தகவலை  அருள்  மலேசியர்களிடம்  மறைத்தது  ஏன்?  அந்த  மோசடியில்  சம்பந்தப்பட்டவர்களுக்கு  எதிராக  அவர்  நடவடிக்கை  எடுக்காதது ஏன்?

“அருள்  கந்தா  2015 ஜனவரியில் அதாவது  ஆபார்  பிவிஐ  செயல்பாட்டை  நிறுத்திகொள்வதற்கு  ஆறு  மாதங்களுக்குமுன்  1எம்டிபி  தலைவராக  நியமனம்  செய்யப்பட்டார்.  அவர்  இத்தகவலை  மூடிமறைத்திருந்தால்  மோசடிக்கு  உடந்தை  என  அவர்மீது  விசாரணை  நடத்த  வேண்டும்”, என  புவா  கூறினார்.