அம்னோ கிளைகள் நஜிப்புக்கு எதிராக ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ நிறைவேற்றியுள்ளன

 

Mukrizumnomotionகெடா மாநில அம்னோ கிளைகள் வரலாறு படைத்துள்ளன. அம்மாநிலத்தின் 50 அம்னோ கிளைகள் கட்சி தலைவர் நஜிப் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாக கெடா மாநில முன்னாள் மந்திரி புசார் முக்ரீஸ் மகாதீர் கூறிக்கொண்டார்.

நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்த அம்னோ கிளைகளின் பட்டியலை முக்ரீஸ் அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். அக்கிளைகள் முன்மொழிந்துள்ள தீர்மானத்தில் அம்னோ அதன் கட்சி தேர்தலை இவ்வாண்டில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன என்று முக்ரீஸ் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இதர கிளைகளும் இருக்கலாம், ஆனால் அது அறிவிக்கப்படவில்லை என்றாரவர்.

கெடாவில் உள்ள அம்னோ கிளைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதல்ல என்று அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். “ஆனால், நமது வரலாற்றில் இது போன்றதொரு தீர்மானத்தை இத்தனை அம்னோ கிளைகள் நிறைவேற்றியதே இல்லை”, என்று முக்ரீஸ் மேலும் கூறினார்.