அம்பிகா: வழக்குகள் சிவில் செயல்முறையில் இருந்தாலும் அவை கிரிமினல் நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டவை

 

Ambigacriminalactஅமெரிக்க நீதித்துறை (டிஒஜி) 1எம்டிபி விவகாரத்தில் தொடுத்துள்ள வழக்குகள் சிவில் செயல்முறையிலானது என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு அவை சிவில் வழக்குகளானாலும் குற்றம் சார்ந்த (கிரிமினல்) நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அம்பிகா நினைவுறுத்தினார்.

இவ்வழக்குகள் முழுவதிலும் மோசடி, கூட்டுச் சதி செய்தல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் குற்றச்செயல்  (கிரிமினல்) சம்பந்தப்பட்டவையாகும் என்று நேற்றிரவு அலிரான் நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

இது குற்றம் சார்ந்த நடத்தை பற்றியதாகும். ஆனால் சிவில் வழக்கு செயல்முறை பின்பற்றப்படுகிறது ஏனென்றால் அது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான வழிமுறையாகும் என்று மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரான அம்பிகா மேலும் கூறினார்.

கடந்த புதன்கிழமை, அமெரிக்க நீதித்துறை 1எம்டிபியின் நிதியிலிருந்து அமெரிக்க டாலர் 3.5 பில்லியனுக்கும் கூடுதலான பணம் மோடி செய்யப்பட்டிருப்பதாக கூறிற்று.

புத்ராஜெயாவில் இருப்பவர்கள், பிரதமர் நஜிப் உட்பட, இந்த வழக்கை வெறும் சிவில் வழக்குதான் என்று அலட்சியமாகப் பேசி வருகின்றனர். இருந்தாலும், நஜிப் நிருவாகம் டிஒஜே வெளிப்படுத்தியிருக்கும் தகவலால் சினமுற்றிருக்கும் மக்களை அடக்குவதற்கு பயமுறுத்தும் நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

“நாம் ஒருமித்த குரலில் பிரதமரே மூட்டையை கட்டுங்கள்”, என்று முழங்க வேண்டும் என்றாரவர்.

டிஒஜே தொடங்கியுள்ள வழக்குகள் சம்பந்தமாக பதவி துறப்பதற்கு நஜிப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பெர்சே 5 நடத்த திட்டமிட்டிருக்கும் பேரணியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் (ஹகாம்) தலைவரான அம்பிகா வேண்டுகோள் விடுத்தார்.