அன்னியர் தலையீடு என்பது கெடா எம்பியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு : பிகேஆர் எம்பி சாடல்

mpமலேசியத்  தலைவரைக்  கவிழ்ப்பதற்காக  வெளிநாடுகள்  மலேசிய   விவகாரங்களில்   தலையிடுவதாக    குற்றம்   சாட்டிய  கெடா   மந்திரி  புசார்   அஹமட்  பாஷா   முகம்மட்  ஹனிபாவை    பிகேஆர்   நாடாளுமன்ற   உறுப்பினர்   ஒருவர்    சாடினார்.

“எந்த  அன்னியத்  தலையீடு  பற்றி  அஹமட்    பாஷா     குறிப்பிடுகிறார்.

“ஆதாரமின்றி  அடிப்படையற்ற,  வெற்று  குற்றச்சாட்டுகளைச்  சுமத்தக்  கூடாது”,  என்று   அலோர்   ஸ்டார்   எம்பியும்    கெடா   பிகேஆர்   துணைத்   தலைவருமான    கூய்   ஹிசியாவ்   லியோங்   கூறினார்.

அஹமட்  பாஷா  நேற்று    ஒரு  நிகழ்வில்   பேசியபோது,     நம்  நாட்டின்   வருங்காலத்   தலைவர்களை   எந்தவொரு   “வெளிநாட்டுச்   சக்தி”யும்    தீர்மானிப்பதைத்   தாம்  விரும்பவில்லை   என்று  கூறியிருந்தார்.

“இப்பிரச்னையை  மக்கள்  கவனிக்க    வேண்டும்.  தலைவரைக்  கவிழ்க்கும்   நோக்கில்   வெளிநாடுகள்  பல   குற்றச்சாட்டுகளை  முன்வைத்துள்ளன”,  என்று  அஹ்மட்  பாஷா   தெரிவித்ததாக   பெர்னாமா   அறிவித்திருந்தது.

1எம்டிபி -இல்  கையாடப்பட்ட   பணத்தைக்   கொண்டு   வாங்கப்பட்ட   யுஎஸ்$ 1பில்லியன்    மதிப்புள்ள  சொத்துகளைக்  கைப்பற்ற    அமெரிக்க  நீதித்துறை (டிஓஜே)  தொடுத்துள்ள   வழக்குகள்  பற்றித்தான்   கெடா  மந்திரி   புசார்   குறிப்பிடுகிறாரா   என    கூய்    வினவினார்.

மேலும்,  இப்படி  ஒரு   குற்றச்சாட்டை  முன்வைத்திருக்கும்     மந்திரி   புசார்,  டிஓஜே  நீதிமன்ற    ஆவணங்களில்   ‘மலேசிய   முதல்நிலை    அதிகாரி’  என்று    பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்கைத்தான்  குறிப்பிடுகிறார்கள்   என்பதை  ஒப்புக்கொள்கிறாரா  எனவும்    அவர்   வினவினார்.