மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விஷத்தன்மை மிக்கது அதை உட்கொள்வதால் கல்லீரல் அழற்சி, புற்றுநோய், மாரடைப்பு போன்றவை ஏற்படலாம்.
மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயில் விஷத்தன்மை அதிகம் என்பதால் அது இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கலாம், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் என மலேசிய முஸ்லிம் மருத்துவர் சங்க (பெர்டிம்) மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் சுபைதி அஹ்மட் கூறினார்.
“மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயின் பாதுகாப்புக்கும் அது சுத்தமானதுதான் என்பதற்கும் உத்தரவாதமில்லை. அது உணவகங்களிலும் தங்குவிடுதிகளிலும் கிடைக்கும் கழிவு எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படுவது”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
தரமான எண்ணெயை மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினம். சோதனைக் கூடங்களில்தான் அதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
ஆனாலும், பயனீட்டாளர்கள் சொந்தத்தில் ஒரு சோதனை செய்து பார்க்கலாம். தாங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை சுமார் இரண்டு மணி நேரம் ஒரு குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
அதன் பின்னர் வெளியில் எடுக்க வேண்டும். சமையல் எண்ணெய் மேல்பகுதியில் நுரை நிரம்பி இருந்தால் அது மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்தான் என்று அவர் விளக்கினார்.
சூழ் நிலைக்குப் பொருந்தும் மிகவும் பயனுள்ள தகவல், ஏற்கனவே பொருளாதாரச் சுழலில் சிக்கி அல்லாடும் மக்களுக்கு இன்னும் காத்திருக்கும் ஆபத்துக்கள் எத்தனையோ தெரியவில்லை. இதில் விநோதம் என்னவென்றால் இந்த மறுசுழற்சி எண்ணெய்கள் பெரும்பாலும் விலைமலிவாக பாக்கெட்டுகளில் பலகாலமாக வியாபாரத்தில் இருந்துகொன்டுதானே இருக்கிறது, இந்த எண்ணெய்கள் ஏற்கனவே பெரிய பெரிய உணவகங்களில், கோழி, இறைச்சி வகைகளை பொறிக்கப் பயன்படுத்தி சிறு வியாபாரிகளால் சேகரித்து பாக்கெட்டுக்களில் மறுசுழற்சி செய்யப்பட்டு விற்பதை ஏற்கனவே பல பொதுநலவாதிகளால் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் நம்மவர்கள் பலர் பூசைக்குகூட இந்த எண்ணெய்களை உபயோகிப்பதைக் காணமுடிகிறது.
மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணை மட்டும் அல்ல பலமுறை உபயோகித்த எண்ணைகளை உணவகங்களில் பயன் படுத்தியும் வருகிறார்கள் அதிலும் நம் உடலுக்கு கெடுதிதான்.
கேத்தரிங்க் செய்வோரில் பலரும் பல உணவகங்களும் இந்த மறு சுழற்சி எண்ணெயைதான் பயன்படுத்துகிறார்கள். இதுவரை அமலாக்க அதிகாரிகள் இவர்களைப் பிடித்திருக்கிறார்களா?
குடும்ப மாதர்களும் வயதானவர்களும் ஒவ்வொருமுறை வாங்கும் சமையல் எண்ணெயை குளிர்பதனப் பெட்டியில் வைத்து மேற்படி சோதனை செய்வது சாத்தியமில்லை என்பதால் இந்த மறுசுழற்சி எண்ணெயை கடைகளில் விற்க அனுமதிக்கக் கூடாது.
மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் ஒருபுறம், மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் தற்போதைய விற்பனை விலைக்கு சாத்தியமில்லை என்ற அமைச்சரின் வாதம் மறுபுறம். எது எப்படியோ சமையல் எண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது.