முன்னாள் சுற்றுலா அமைச்சர் இங் யென் யென் அவரது முன்னாள் தொகுதியான ரவுப்பில் சில நிகழ்வுகளுக்காக ரிம 5.2 மில்லியன் செலவிட்டது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்.
அமைச்சு மீதான பொதுக் கணக்குக் குழு(பிஏசி) அறிக்கையில் அந்தத் தொகை கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது என சிரம்பான் எம்பி அந்தோனி லோக் கூறினார்.
“சுற்றுலா அமைச்சிலிருந்து செலவிடச் சொல்லி உத்தரவு வந்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. உத்தரவிட்டது யார்? அமைச்சராகத்தான் இருக்க வேண்டும், இல்லையா?”, என நாடாளுமன்ற வளாகத்தில், செய்தியாளர் கூட்டத்தில் லோக் வினவினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிஏசி அறிக்கை, 2011 செப்டம்பருக்கும் 2012 ஜனவரிக்குமிடையில் ரவுப்பில் 12 நிகழ்வுகள் நடத்தப்பட்டதாகவும் அவற்றுக்கு ரிம5.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும் கூறியது.
அவ்வளவு செலவிட்டதில் நியாயமில்லை என்று குறிப்பிட்ட அது, நாட்டின் மொத்த சுற்றுலாப் பயணிகளில் ரவுப்புக்குச் சுற்றுலா மேற்கொள்வோர் எண்ணிக்கை 0.4 தான் என்பதைச் சுட்டிக்காட்டியது.
அதிகமாக செலவிடப்பட்டது 2012 சீனப் புத்தாண்டு விருந்துக்காக. அதற்கு ரிம1.3 மில்லியன் செலவானது.
“ரிம1.3 மில்லியன் செலவிடும் அளவுக்கு அப்படி என்ன விலை உயர்ந்த உணவு பரிமாறப்பட்டது?…. வருகையாளர்களுக்கு என்ன அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. ஏதும் ஊழல் நடந்துள்ளதா?
“இங், அவரே விளக்கம் கூற வேண்டும்……. எம்ஏசிசி இதை விசாரிக்க வேண்டும்”, என லோக் கூறினார்..

























