1எம்டிபி எஞ்சியுள்ள ரிம40 பில்லியன் கடனை எப்படி திருப்பிக் கொடுக்கும்?, கேட்கிறார் மகாதிர்

 

Maskshowwil40bbepaidகிட்டத்தட்ட இன்னும் ரிம40 பில்லியனுக்கு இருக்கும் அதன் கடனை 1எம்டிபி எப்படித் திரும்பக் கொடுக்கப் போகிறது என்பதற்கு பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்  கோரியுள்ளார்.

கிட்டத்தட்ட ரிம3.9 பில்லியன் வங்கிக் கடன்கள் மற்றும் குறைந்த-கால கடன்கள் ஆகியவற்றை திருப்பிக் கொடுத்து விட்டதாக பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலைத் தொடர்ந்து மகாதிர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

1எம்டிபிக்குச் சொந்தமான பல சொத்துக்களை, எட்ரா குளோபல் எனர்ஜி பெர்ஹாட், பண்டார் மலேசியா மற்றும் துன் ரசாக் எக்ஸ்சேஞ் நிலங்கள் உட்பட, விற்று இக்கடன்களை அடைத்திருக்கக்கூடும் என்று மகாதிர் கூறினார்.

“மேற்கொண்டு சொத்துகள் ஏதும் இல்லையென்றால், இந்த ரிம40 பில்லியனை 1எம்டிபி எப்படி திரட்டப் போகிறது?”, என்று இன்றிரவு அவரது வலைத்தளத்தில் செய்துள்ள பதிவில் மகாதிர் கேட்கிறார்.

மேலும், கடனாக இருக்கிற இந்த ரிம40 பில்லியன் எப்படி செலவு செய்யப்பட்டது என்றும் அவர் கேட்கிறார்.

“இது பெரும் பணம். இது எங்காவது இருக்க வேண்டும். இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? அப்படி என்றால், எதில் செய்யப்பட்டுள்ளது? அல்லது, அது முடக்கப்பட்டுள்ளதா?

“அப்படி என்றால், முடக்கப்பட்ட பணம் யாரிடம் இருக்கிறது. ஏன்? முடக்கப்பட்டுள்ள பணத்தை திரும்பக் கோரும் உரிமை 1எம்டிபிக்கு இருக்கிறாதா?, என்று மகாதிர் பல கேள்விகளைக் கேட்டுள்ளார்.

பிரதமர் நஜிப் தற்போது அளித்துள்ள விளக்கம் இன்னும் அதிகப்படியான கேள்விகளை எழுப்புகிறதே பதிலை அளிக்கவில்லை என்றாரவர்.

“அநேகமாக, பிரதமர் விளக்கம் அளிக்க முடியும். இது மக்களின் பணம். அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஏனென்றால், இறுதியில் எப்படியோ ஒரு வழியில் அதை அவர்கள் செலுத்தியாக வேண்டும்”, என்று மகாதிர் கூறுகிறார்.