‘அன்வார் 7வது பிரதமர்’-அறிவிப்பு அட்டைகளுடன் காணப்பட்டார்கள் ஹராபான் தலைவர்கள், ஆனால்…….

anwarநாட்டின்   அடுத்த   பிரதமர்   யார்   என்றால்     அன்வார்  இப்ராகிம்தான்   பக்கத்தான்   ஹராபான்   தலைவர்கள்   பெரும்பாலோரின்   முதன்மைத்   தேர்வு   என்பது   தெளிவாக  தெரிகிறது.

இன்று   ஷா  ஆலமில்,   பிகேஆர்   தேசிய   காங்கிரசில்  சுமார்   ஆயிரம்    பிகேஆர்   பேராளர்கள்   கலந்து  கொண்ட   கூட்டத்தில்,  பிகேஆர்    தலைவர்கள்   ‘அன்வார்  7வது  பிரதமர்’   என்ற   வாசகம்  கொண்ட    அறிவிப்பு  அட்டைகளுடன்   காணப்பட்டனர்.

முதல்   வரிசையில்  நின்றிருந்த  பிகேஆர்    தலைவர்    டாக்டர்   வான்   அசிசா    வான்   இஸ்மாயில்   துணைத்  தலைவர்    அஸ்மின்   அலி,    உதவித்    தலைவர்கள்   ஆகியோர்   கைகளில்    அறிவிப்பு   அட்டைகளை   ஏந்தியிருந்தனர்.

அவர்களுடன்   டிஏபி    பெருந்  தலைவர்   லிம்  கிட்   சியாங்கும்    பார்டி   அமனா   நெகரா (அமனா)   தலைவர்   முகம்மட்   சாபுவும்   சேர்ந்து    கொண்டனர்.

பார்டி   பிரிபூமி   பெர்சத்து    மலேசியா (பெர்சத்து)    அவைத்   தலைவர்  டாக்டர்     மகாதிர்   முகம்மட்     தலைவர்    முகைதின்   யாசின்   ஆகியோரும்   கூட்டத்துக்கு   வந்திருந்தனர்.   ஆனால்,  அவர்கள்   கரங்களில்   அறிவிப்பு   அட்டைகள்   இல்லை.

மகாதிர்  கைபேசியில்   கூட்டத்தைப்  படம்   பிடித்துக்  கொண்டிருந்தார். முகைதின்   புன்னகையுடன்   கைதட்டி    பாராட்டினார்.  ஆனால்,  அறிவிப்பு  அட்டை   எதையும்  வைத்திருக்கவில்லை.

ஹராபான்  கூட்டணி   தொடங்கப்பட்டதிலிருந்தே   அன்வார்தான்   பிரதமர்   என்பது   அதன்  நிலைப்பாடாக   இருந்து   வந்துள்ளது.  அது  குறித்து   எவரும்  கேள்வி   எழுப்பியதில்லை.

ஆனால்,  எதிரணிக்  கூட்டணியில்   பிறகு   வந்து   இணைந்த  பெர்சத்துவின்    விருப்பம்    வேறு  விதமாக   உள்ளது.    மகாதிர்  அல்லது   முகைதின்   அடுத்த   பிரதமராவதையே   அது  ஆதரிக்கிறது.

மகாதிரைப்  பொருத்தவரை    இப்போதைக்கு    அது  குறித்து   விவாதிக்க   வேண்டாம்   என்கிறார். அது    கூட்டணியில்   சர்ச்சைக்கு  இட்டுச்  செல்லலாம்   என்றவர்   அஞ்சுகிறார்.

அன்வார்   ஐந்தாண்டு   சிறைத்தண்டனை   பெற்றதால்    தேர்தலில்   போட்டியிட   முடியாது.

2020-இல்   அவர்  விடுதலை   ஆவார்.  விடுதலை   பெற்ற   பின்னரும்கூட   மேலும்    ஐந்தண்டுகளுக்கு   அவர்   தேர்தலில்   போட்டியிடும்   தகுதியை  இழந்திருப்பார்.

எதிரணியினர்   அன்வாருக்கு    அரச   மன்னிப்பைப்  பெற  முயற்சி     செய்து   வருகிறார்கள்.  அது  கிடைக்குமானால்   அவர்    தேர்தலில்    போட்டியிட   முடியும்..

நேற்று  பிகேஆர்    இளைஞர்   மாநாட்டில்    அன்வார்  விடுதலை   ஆகி  வரும்வரை    வான்    அசிசா   பிரதமராக    இருக்கலாம்     என்ற  கருத்து  முன்வைக்கப்பட்டது.