தேசியப்பள்ளிகளிலும் ஓர் இனத்தவரே, ஒப்பாரி வைக்கும் அம்னோ இளைஞர் தலைவர்

 

Nationalschooltooஇன்றையத் தேசியப்பள்ளிகள்கூட ஓர் இனம் சார்ந்தவைகளாகிவிட்டன என்று கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் முகமட் ரஸ்லான் முகம்மட் ராபீ கூறுகிறார்.

நேற்று தித்திவங்சாவில் நடைபெற்ற ஒரு டிஎன்50 (TN50) கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒருவர் ஒரே-வகைப் பள்ளி முறையை வலியுறுத்தி அதில் மலேசியாவின் பல்வேறு சமூகங்களின் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்ததை முகமட் ரஸ்லான் பாராட்டினார்.

நான் சிறுவனாக இருந்த போது தேசியப்பள்ளியில் 20 லிருந்து 30 சீனர்கள், 20 லிருந்து 30 மலாய்க்காரர்கள் மற்றும் 20 லிருந்து 30 இந்தியர்கள் இருந்தார்கள்.

“ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது? தேசியப்பள்ளிகளில் 90 விழுக்காட்டினர் ஓர் இனத்திலிருந்து வந்திருக்கிறார்கள்; இன்னொரு இனத்தினர் சீனப்பள்ளிக்குச் செல்கின்றனர் மற்றும் வேறொரு இனத்தினர் தமிழ்ப்பள்ளிக்குச் செல்கின்றனர். இது நமது நாட்டிற்கு நல்லதா?

“முன்பு பேசிய ஒருவர் சொன்னது போல, எல்லா இனத்தவர்களும் ஒரு கூரையின் கீழ் உட்காரலாம், ஆனால், அவர்களின் அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல்”, என்று அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் ஹனியும் உடனிருந்தார்.

இதற்கு முன்னர் தம்மை யாசார் அரபாட் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், 2050 அளவில் மலேசியாவில் நாம் அடைய விரும்பும் உயர்நோக்கங்களில் ஒன்று ஒரே-வகையான பள்ளிகளைப் பெற்றிருப்பது, ஆனால் அப்பள்ளிகள் மலேசியாவின் இதர இனங்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

எடுத்துக்காட்டாக, முஸ்லிம் மாணவர்கள் ஜாவி படிக்க வேண்டும். சீன மற்றும் இந்திய மாணவர்கள் அவரவர்களின் தாய்மொழியைப் படிக்க வேண்டும் என்றாரவர்.

இதன்வழி, ஒரே பள்ளியில் படிக்கும் போது மற்றவர்கள் தங்களுடைய அடையாளங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இது விவாதிக்கப்பட வேண்டிய உயர்நோக்கங்களில் அடங்கும். ஆனால் இது உணர்ச்சிகரமான விவகாரம் என்று ரஸ்லான் எச்சரித்தார்.

இது போன்ற உயர்நோக்கங்களைப் பலர் ஆதரித்தால், அவ்வாறான பள்ளிகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட வேண்டியிருக்கும் என்று ஜொஹாரி கூறினார்.