ஹராப்பானின் முடிவை அஸ்மின் ஏற்றுக்கொண்டார், இருப்பினும்…

azmin-pas-pkrகடந்த ஆகஸ்ட் 29-ல், பாஸ் உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சபை எடுத்த முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அஸ்மின் அலி; இருப்பினும், யாருடனும் பேசுவதற்கு தனக்கு இன்னும் சுதந்திரம் உண்டு என்றும் கூறினார்.

“யாருடனும் பேச எனக்கு சுதந்திரம் உண்டு. செவ்வாய் இரவன்று, நான் துணைப் பிரதமருடன் பேசினேன், நேற்றிரவு பிரதமருடன் பேசினேன்,” என்று அஸ்மின் கூறியதாக ஃப்.எம்.தி. செய்திகள் வெளியிட்டுள்ளது.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின், விரைவில் வரக்கூடும் எனும் நம்பப்படும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, தேர்தல் இயந்திரங்களை வலுப்படுத்துவதே கட்சியின் தற்போதைய முக்கியப் பணி என்றார்.

14-வது பொதுத் தேர்தலில், பாரிசானை எதிர்கொள்ள, பாஸ் உடன் ஒத்துழைக்க வேண்டுமென ஒருசில பிகேஆர் தலைவர்கள் விரும்பினாலும், பெரும்பான்மையினர் அதனை எதிர்க்கின்றனர்.

அதே சமயம், பாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதுடன், அவ்வப்போது பிகேஆரை எதிர்த்து அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், பாஸ் உடனான உறவு குறித்து இறுதி முடிவெடுக்க, பிகேஆர் சிறப்பு மாநாடு ஒன்றைக் கூட்ட வேண்டுமென்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி பரிந்துரைத்துள்ளார்.

முன்னதாக, ஹராப்பான் – பாஸ் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு அஸ்மின் அலி செல்லவில்லை. அதுகுறித்து கேட்டபோது, அன்றைய தினம் வேறு ஒரு அலுவல் இருந்ததால், தன்னால் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், ஹராப்பான் – பாஸ் பேச்சுவார்த்தையை ஆதரித்த பிகேஆர் தலைவர்களில் சிலாங்கூரின் மந்திரி பெசார் அஸ்மின் அலிதான் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.