கசானாவிலிருந்து நோர் முகமட் யாக்கோப் பதவி விலகினார்

nur-muhammad-yakubகசானா நேசனலின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக, நோர் முகமட் யாக்கோப் அறிவித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான அம்முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, காசானா இயக்குனர்கள் குழுவிலிருந்தும், கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் விலகப்போவதாக நோர் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவரின் பதவி விலகல் எதிர்வரும்  செப்டம்பர் 30- ஆம் தேதி நடப்புக்கு வரவிருக்கிறது.

70 வயதான நோர், மத்திய வங்கியின் ஆளுநருக்கு  ஆலோசகராகவும் அப்துல்லா அஹ்மட் படாவி நிர்வாகத்தின் கீழ் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு முதல் 2013 வரை, பிரதமர் துறை அமைச்சில் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் அமைச்சராகவும் நோர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கசானா இயக்குநர்கள் வாரியத்தின் நீண்ட கால உறுப்பினராகவும், கசானா நிறுவப்பட்டதிலிருந்து அதன் துணைத் தலைவராகவும் நோர் இருந்துள்ளார்.

1990- களில் பேங்க் நெகாரா  அந்நியச் செலாவணி வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்ட  இழப்பை விசாரிக்க, ஆர்.சி.ஐ.-யால் அழைக்கப்பட்ட சாட்சிகளில் இவரும் ஒருவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இழப்புக்களுக்குத் தானும் பொறுப்பாளி என்றும், அதில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீருக்கு சம்பந்தம் இல்லை என்றும் அவர் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட் ஷார்காஷி, டாக்டர் மகாதீரைப் பாதுகாக்க நோர் முயற்சி செய்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

அதே சமயம், கசானாவில் நோர் ஆற்றிய நீண்டகால சேவைக்குப் பிரதமர் நஜிப் நன்றி கூறிகொண்டார்.