இனவாத-எதிர்ப்புச் சட்டம் நமக்குத் தேவையில்லை- பிரதமர்துறை

அரசாங்கம்    இனவாத-எதிர்ப்புச்   சட்டம்   அல்லது    பாகுபாடு-எதிர்ப்புச்  சட்டத்தைக்   கொண்டுவர    எண்ணங்   கொண்டிருக்கவில்லை.   ஏனென்றால், ஒரு  பல்லினச்   சமுதாயத்தில்   சட்டத்தின்   மூலமாக    ஒற்றுமையைக்   கொண்டுவருவது   சிறந்த   முறை   ஆகாது.

அப்படிப்பட்ட     சட்டங்கள்   தேவையில்லை,   ஏனென்றால்   நாட்டில்   ஒற்றுமை   நல்ல   நிலையில்    கட்டுப்பாட்டுக்கு   உட்பட்ட    நிலையில்   உள்ளது   என  பிரதமர்துறை   நேற்று    நாடாளுமன்றத்தில்    தெரிவிக்கப்பட்ட     பதிலொன்றில்  கூறியிருந்தது.

கல்விவழி   ஒற்றுமையை   உண்டாக்குவதே   அரசாங்கத்தின்   நோக்கம்.
“அரசாங்கம்   சட்டம்போட்டு  ஒற்றுமையை   உண்டாக்க  முயலாது. ஒற்றுமை   என்பது   சிறுவயதிலிருந்தே   வளர்க்கப்பட   வேண்டிய   ஒன்று.

“ஒற்றுமையை   உண்டாக்கும்  முயற்சி   கட்டாயப்படுத்துவதாக   இருக்கக்கூடாது”, என  பிரதமர்துறை  கூறிற்று.

மக்களை   ஒன்றுபடுத்த   சட்டங்கள்   கொண்டுவரும்    எண்ணம்   உண்டா    என்று  லிம்   லிப்  எங்(டிஏபி- செகாம்புட்)   பிரதமரிடம்    கேட்டிருந்த    கேள்விக்குப்   பிரதமர்துறை    இவ்வாறு   பதிலளித்திருந்தது.