பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்த ஆர்வலர், பிரதமரிடம் மனு கொடுத்தார்

2016-ல், பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பேங்க் நெகாரா (பிஎன்எம்) ஊழியர் கோகிலா ஞானசேகரன் இன்று பிரதமரிடமும் மனித வளத்துறை அமைச்சரிடமும் ஒரு மனுவைக் கையளித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் அணியின் (ஜெரிட்) ஆர்வலருமான கோகிலா, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னர், மனித வள அமைச்சில் அமைச்சர் எம்.குலசேகரனைச் சந்தித்தார்.

அவருடன் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ.சிவராஜன், மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் ஆகியோரும் இருந்தனர்.

கோகிலாவைத் தொடர்புகொண்ட போது, “குலா எனது கோரிக்கை மனுவைக் கவனிப்பதாக உறுதியளித்துள்ளார்,” என்றார்.

அம்மனுவில், தன்னைப் பணியிலிருந்து நீக்கியதை மீட்டுக் கொண்டு, மீண்டும் அதே பணியில் தன்னை அமர்த்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளதாக கோகிலா தெரிவித்தார்.

தன்னை பணி நீக்கம் செய்தது செல்லுபடியாகாது என்பதால், அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும் என்றும் கோகிலா கூறினார்.

சட்டவிரோத பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி, வேலை இல்லாத காலத்தின் போதான சம்பளம், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்பங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு தனக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

“2016-ல் கொடுக்கப்படாத போனஸ் உட்பட, தேசிய வங்கி ஊழியருக்கான அனைத்து வசதிகளையும் திரும்பக் கொடுக்க வேண்டும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

வேலை நேரத்தின்போது, தான் அப்பேரணியில் கலந்துகொள்ளவில்லை என்பதால், பேங்க் நெகாராவின் நடவடிக்கைகள் தனது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறியுள்ளதாக தான் கருதுவதாகவும் கோகிலா கூறினார்.