ஸகிர் நாய்க் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒப்பந்தத்தை புத்ரா ஜெயா மதிக்க வேண்டும், இராமசாமி கூறுகிறார்

 

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸகிர் நாய்க் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுவதற்கான மலேசியா-இந்தியா ஒப்பந்தத்தை புத்ரா ஜெயா மதிக்க வேண்டும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் II பி. இராமசாமி கூறுகிறார்.

ஸகிரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டிருந்தால், அக்கோரிக்கை மதிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்று மாலை மலேசியாகினியிடம் கூறினார்.

இந்தியாவும் மலேசியாவும் 2010 ஆம் ஆண்டில் தப்பி ஓடி வந்தவரை அவரது நாட்டிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு இந்தியாவில் பிறந்த அந்த சமய போதகரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி அதிகாரப்பூர்வமாக மலேசியாவை கேட்டுக் கொண்டுள்ளதாக கடந்த புதன்கிழமை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இங்கு நிரந்தரமாகத் தங்குவதற்குவதான தகுதி வழங்கப்பட்டுள்ள ஸகிர் திருப்பி அனுப்பப்பட மாட்டார் என்று பிரதமர் மகாதிர் இன்று காலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் பிரச்சனைகள் எதையும் உருவாக்காக வரையில், அவரை நாங்கள் திருப்பி அனுப்பமாட்டோம் ஏனென்றால் அவருக்கு நிரந்தரமாகத் தங்கும் தகுதி இருக்கிறது என்றார்வர்.

ஸகிரிக்கு எதிராக இந்தியா சுமத்தியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுட்டிக் காட்டிய இராமசாமி, ஸகிர் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை; இந்தியா ஒரு ஜனநாயக நாடு; ஸகிர் ஒரு நிரபாரதி என்றால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அவர் நீதிமன்றத்தில் சவால் விடலாம் என்றார்.

மலேசியா மற்றவர்களை நாடு கடத்தியதைச் சுட்டிக் காட்டிய இராமசாமி, சிறீ லங்கா அரசாங்கம் தேடியவர்களை மலேசியா இரகசியமாக திருப்பி அனுப்பியதை நினைவூட்டினார்.

மலேசியா தேடும் குற்றவாளிகளை மற்ற நாடுகள் திருப்பி அனுப்ப மறுத்து விட்டால் என்ன ஆகும் என்றும் அவர் கேட்டார்.

மலேசியாவில் ஸகிர் குற்றங்கள் ஏதும் புரிந்துள்ளாரா என்பது தமக்குத் தெரியாது என்று கூறிய இராமசாமி, ஆனால் அவர் வெறுப்புணர்வு பேச்சுகளைக் கொட்டியுள்ளார் என்றார்.

ஸகிரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று குலசேகரன் கடந்த காலத்தில் கேட்டுள்ளார்.

வெறுப்புணர்வு பேச்சுகளை உதிர்க்கும் ஸகிரின் நிரந்தரமாகத் தங்குவதற்கான தகுதியை இரத்து செய்து அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று குலசேகரன் பிஎன் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.

மலேசியா ஒரு பல்லின நாடு. ஸகிர் அதை மதிக்க வேண்டும். அவர் இங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றார் குலசேகரன்.

பணச் சலவை செய்தல் மற்றும் வெறுப்பை ஊட்டும் பேச்சுகள் போன்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வதற்கு அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ரு குலசேகரன் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் அவருக்குத் தடை விதித்துள்ளதைச் சுட்டிக் காட்டிய குலசேகரன், மலேசியாவும் அதைச் செய்ய வேண்டும் என்றார்.

மகாதிரின் மிக அண்மையக் கருத்து குறித்து விமர்சனம் பெற மலேசியாகினி குலசேகரனை தொடர்பு கொள்ளவுள்ளது.