ஜோ லோ சீனாவில் இல்லையாம்: சீனா அதிகாரி கூறுகிறார்

மலேசிய   தொழில்   அதிபர்   ஜோ  லோ   சீனத்    தலைநிலத்தில்    பதுங்கி  இருப்பதாகக்   கூறப்படுவதை   சீனா   அதிகாரி   ஒருவர்   மறுத்தார்  என   சவுத்  சைனா  மார்னிங்   போஸ்ட்     கூறியது.

அந்த   நாளேடுதான்   ஏற்கனவே   லோ,  மக்காவிலிருந்து   தலைநிலத்துக்குத்   தப்பி   ஓடியதாக    செய்தி   வெளியிட்டிருந்தது.  ஆனால்,  அச்செய்தியை  சீனா   அதிகாரி   நிராகரித்தார்.

“அவர்   சீனத்   தலைநிலத்தில்    இல்லை    என்பது   திட்டவட்டம்.  தலைநிலத்தில்தான்    அவர்   ஒளிந்துகொண்டிருக்கிறார்  என்று  கூறுவது   பொறுப்பற்ற  செயல்”,  என்றவர்   கூறினார்.

செவ்வாய்க்கிழமை  மலேசிய   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்   போலீஸ்   முகம்மட்  பூஸி   அப்துல்  ரஹ்மான்,     ஜோ  லோவைப்  பிடிப்பதற்கு   போலீஸ்  குழு  ஒன்று   ஹாங்காங்   சென்றிருப்பதாகக்  கூறினார்.

ஆனால்,  போலீஸ்   குழு   அங்கு   சென்றடையும்  முன்பே  லோ  மக்காவ்   தப்பிச்   சென்று விட்டார்.  அதனைத்   தொடர்ந்து   மக்காவ்   போலீசாரின்   உதவி   நாடப்பட்டது.

மக்காவ்  போலீஸ்    லோ   அங்கிருந்தும்  நழுவிச்   சென்றுவிட்டதாகத்     தெரிவித்தது.

இதனிடையே,   த   ஸ்டார்   ஆன்லைன்,  ஒரு  வட்டாரத்தை   மேற்கோள்காட்டி   அந்த  36-வயது   கோடீஸ்வரர்  செயிண்ட்  கிட்ஸ்,  நீவீஸ்  தீவுகளுக்குச்   சென்று  விட்டதாகக்  கூறியுள்ளது.  அங்கு   அவருக்குக்  குடியுரிமை   இருக்கிறதாம்.