சுங்கை கண்டிஸ்-ஐ கைப்பற்ற புத்ரா எம்.ஐ.சி. லொக்மான் அடாமிற்கு உதவும்

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில், பாரிசான் நேசனல் வெற்றியை உறுதிசெய்ய, சிலாங்கூர் ம.இ.கா. புத்ரா பிரிவு இந்திய இளைஞர்களை அணுகும்.

அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 4-ம் தேதி வாக்களிக்க, இளம் வாக்காளர்கள் ஊர் திரும்பவும் தாங்கள் ஆவன செய்யவுள்ளதாக புத்ரா பிரிவின் தலைவர் சசி முனியாண்டி கூறியுள்ளார்.

“சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல் சற்று கடினமானது என்று நாங்கள் நினைக்கிறோம், இங்குள்ள இளம் வாக்காளர்களை அணுக சிலாங்கூர் ம.இ.கா. புத்ரா உதவும்.

“இரு கட்சிகளும், வாக்குகள் பெற வேண்டும் எனும் எண்ணத்தில், மக்களின் மனதைக் கவர பல முயற்சிகளை எடுக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

இன்று ஷா ஆலாமில், வேட்பு மனு தாக்கலின் போது அவர் இவ்வாறு சொன்னார்.

பிஎன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட லொக்மான் நூர் ஆடாம் சிறந்த வேட்பாளார் என்றும், அரசியல் உலகில் பரந்த அனுபவத்தைக் கொண்டவர் என்றும் சசி விவரித்தார்.

சுங்கை கண்டீஸ் தொகுதியில் 50,800 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையாக மலாய் வாக்காளர்கள் 71 %, 15.62% இந்தியர் மற்றும் 11.67% சீனர்கள் உள்ளனர்.