மலாயா தலைமை நீதிபதி: நாளை வேலை நிறுத்தம் கைவிடப்படும் என்று நம்புகிறேன்

கடந்த மாதம் முதல், குத்தகையாளர் சம்பளம் கொடுக்கவில்லை எனக்கூறி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், 200-க்கும் மேற்பட்ட கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், நீதித்துறை அதிகாரிகளும் இன்று ‘கோத்தோங் ரோயோங்’-கில் இறங்கினர்.

மலாயா தலைமை நீதிபதி ஜஹாரா இப்ராஹிம் இந்தப் பிரச்சினை மீண்டும் எழாது என்று உறுதியளித்தார்.

“தவறான புரிந்துணர்வின் காரணமாக இது நேர்ந்துள்ளது, அப்பிரச்சனையைக் களைய நாங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் … இன்று நாங்கள் ‘பெர்ஃபேக்ட் திரி சொலுஷன் சென்.பெர்.’ துப்புரவு குத்தகையாளரின் பிரதிநிதியுடன் கலந்துபேசினோம், நாளை இப்பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.

இன்று மதியம் 3 மணியளவில், கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில், ‘கோத்தோங் ரோயோங்’ முடிந்தவுடன், அவர் நிருபர்களிடம் பேசினார்.