பேராக்கின் சுயேச்சை எம்பி ஒருவர் அவரது தொகுதியை அன்வாருக்கு விட்டுக்கொடுப்பாராம்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு பேராக் எம்பி ஒருவர் அவருடைய தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது.

இப்போது சுயேச்சையாக உள்ள முன்னாள் பிஎன் ஒருவர், அவருடைய தொகுதியைக் காலி செய்து கொடுக்க தயாராக இருக்கிறாராம். ஃப்ரி மலேசியா டுடே செய்தித்தளத்தில் வெளிவந்த ஒரு செய்தி கூறுகிறது.

“அந்த எம்பி அண்மையில் அன்வாரைச் சந்தித்து பிகேஆர் தலைவர் போட்டியிடுவதற்காக தன்னுடைய தொகுதியைக் காலி செய்ய ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

“புத்ரா ஜெயாவிலும் பேராக்கிலும் பக்கத்தான் ரக்யாட் ஆட்சிதான் நடக்கிறது என்பதால் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது அன்வாருக்கு ஒரு பிரச்னையாக இருக்காது”, என்று ஒரு வட்டாரம் தெரிவித்ததாக அச்செய்தி கூறிற்று.

அன்வாருக்காக தன்னுடைய தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ள அந்த எம்பி யார் என்பதுதான் கேல்விக்குறியாக உள்ளது. பாகான் செராய் எம்பி நூர் அஸ்மி கசாலி, புக்கிட் கந்தாங் எம்பி சைட் அபு ஹுசேன் சைட் அப்துல் பசால் ஆகிய இருவருமே பிஎன்/அம்னோ வேட்பாளர்களாகப் போட்டியிட்டு குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்கள். பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றதை அடுத்து அவ்விருவரும் பிஎன்னிலிருந்து வெளியேறித் தங்களைச் சுயேச்சை எம்பிகளாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்.

இதற்குமுன், செலாயாங் பிகேஆர் எம்பி வில்லியம் லியோங்கும் சுங்கை பட்டாணி எம்பி ஜொகாரி அப்துல்லும் தங்கள் தொகுதிகளை அன்வாருக்கு விட்டுக்கொடுக்க முன்வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.