எஸ்எஸ்டி-ஆல்தான் ஹரப்பானுக்கு அழிவு -அன்னுவார்

நேற்று அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த பொருள், சேவை வரி(எஸ்எஸ்டி)தான் பக்கத்தான் ஹரப்பானை அழிவுக்கு இட்டுச் செல்லப் போகின்றது என்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா.

எஸ்எஸ்டி-யால் பொருள் விலைகள் உயரும் பட்சத்தில் ஈராண்டுகளுக்குள்ளேயே அப்பேரிடர் நிகழ்ந்து விடலாம் என்றவர் கருதுகிறார்.

“எஸ்எஸ்டி அமலாக்கத்தைத் தொடர்ந்து பொருள் விலைகளும் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்குமானால் அரசாங்கம் பேரழிவை எதிர்நோக்கும்.

“இரண்டாண்டுகளுக்குள் அது நிகழலாம்”, என்று கூறியவர் அழிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் குறிப்பிடவில்லை.

நேற்றிரவு பாசிர் சாலாக்கில் ஹிம்புனான் மலாயு பாங்கிட் எனப்படும் மலாய் எழிச்சிப் பேரணிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரிடையே பேசியபோது அன்னுவார் இவ்வாறு கூறினார்.