ராம்கர்பால்: முன்னாள் ஐஜிபி ஹனிப் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்பட வேண்டும்

 

டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் வழக்குரைஞரான ராம்கர்பால் சிங், அவர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமாவார், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகமட் ஹனிப் ஒமாரை தேச நிந்தனைச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கும்படி போலீஸை கேட்டுக் கொண்டுள்ளார்.

இக்கோரிக்கை டிஎபி கடந்த காலத்தில் தீவகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் – ஒன்று மலாய்க்காரர்களுக்காவும் மற்றொன்று சீனர்களுக்காகவும் – என்று கேட்டிருந்ததாக ஹனிப் கூறிக்கொண்டது பற்றியதாகும்.

ஹனிப்பை தேச நிந்தனைக்காக விசாரிக்க வேண்டும் என்றும் ராம்கர்பால் வலியுறுத்தினார், ஏனென்றால் ஹனிப்பின் அறிக்கை ஓர் இனத்தை மற்றொன்றுடன் – சீனர்களுக்கு எதிராக மலாய்க்காரர்களை – மோதவிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஹனிப்பின் குற்றச்சாட்டுகள் முழுதும் அடிப்படையற்றவை என்பதோடு அவற்றை கூறுவதற்கான ஒரே நோக்கம் லிம்மின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும் என்று லிம் கூறியிருப்பதை தாம் மீண்டும் தெரிவிப்பதாக ராம்கர்பால் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

டிஎபி தீவகற்ப மலேசியாவை இன அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று டிஎபி விரும்பியதாகவும் அதற்கான தமது எதிர்நடவடிக்கை லிம் கிட் சியாங்கை சிறையில் அடைத்ததாகும் என்று ஹனிப் கூறியதாக அவரை மேற்கோள் காட்டி கடந்த வியாழக்கிழமை சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

இது சம்பந்தமாக எதிர்வரும் புதன்கிழமை ஹனிப்புக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பப் போவதாக ராம்கர்பால் மேலும் கூறினர்.