ஆர்ஓஎஸ் ஆலோசனையின்பேரில் நெகிரி செம்பிலான் பெர்சத்து கலைக்கப்பட்டது

பல்வேறு காரணங்களுக்காக நெகிரி செம்பிலான் பெர்சத்து கட்சி கலைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தேசியத் தலைவர் முகைதின் யாசின் கூறினார்.

அக்கடுமையான நடவடிக்கை சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்தின் ஆலோசனையின்பேரில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“அங்கு பல பிரச்னைகள். ஆர்ஓஎஸ் (நெகிரி செம்பிலான் கிளையை) கலைத்துவிட்டு மாநிலத்துக்குப் புதிய தலைமைத்துவத்தைத் தெரிவு செய்யுமாறு ஆலோசனை கூறியது”, என்றவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் பெர்சத்துவின் பிரச்னைகளை வெளியில் சொல்ல முகைதின் தயங்கினார்.

“நிறைய பிரச்னைகள். போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன, செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன……நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை”, என்றாரவர்.

நெகிரி செம்பிலான் பெர்சத்துவைச் சீரமைக்கும் பொறுப்பு மூத்த அரசியல்வாதி ரயிஸ் யாத்திடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக முகைதின் கூறினார்.

இதனிடையே, அதன் தலைமைச் செயலாளர் ஷாருடின் முகம்மட் சாலே-க்குப் பதிலாக மர்சூகி யாக்யா நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.