போர்ட் டிக்சன் இந்திய சமூகத்துக்கு நல்ல சுகாதாரச் சேவைகள் தேவை

போர்ட் டிக்சனில் புறநகர் பகுதிகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் தங்களுக்கு மற்றவற்றோடு தரமான சுகாதாரச் சேவைகளும் தேவை என்கிறார்கள்.

அங்குள்ளவர்கள், குறிப்பாக சுவா சட்டமன்றத் தொகுதியில் வசிப்பவர்கள், நகர்ப்புறங்களில் இருப்பதைப் போன்ற சுகாதார வசதிகள் கிராமப் புறங்களுக்கும் கிடைக்கச் செய்வதற்குக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் அந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிறைய சுகாதார கிளினிக்குகள் தேவை என்று சுவா, கம்போங் இந்தியாவைச் சேர்ந்த பி.வர்ஷ்ணி ,26, கூறினார். இப்போது ஒரே ஒரு கிளினிக்தான் உள்ளது- கிளினிக் டேசா சுவா. அதுதான் கம்போங் சாவா, கம்போங் இந்தியா, கம்போங் சுங்கை நீபா, கம்போங் பட்சிடான் ஆகியவற்றுக்குச் சேவையாற்றி வருகிறது.

“போர்ட் டிக்சன் உள்பகுதிகளில் கூடுதல் கிளினிக்குகள் தேவை”, என்றாரவர்.

அந்தக் கிராமங்களில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக கிளினிக் லுக்குட் அல்லது சிரம்பான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. அவை தொலைதூரத்தில் உள்ளன என்றார்.