உலக சமய பாராளுமன்றக் கூட்டம், வேதமூர்த்தி கலந்துகொள்கிறார்

‘உலகைக் காக்க சமயத் தலைவர்கள்’ என்னும் கருப்பொருளில் உலக பாரம்பரிய சமயத் தலைவர்கள் ஒன்றுகூடும் பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி கசகஸ்தான் நாட்டிற்கு அக்.9-ஆம் நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அஸ்தானா பெருநகரில் அக்டோபர் 10 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆறாவது மாநாட்டில், கசகஸ்தான் குடியரசின் அதிபர் நுர்சுல்தான் நசர்பாயேவ், புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான வேதமூர்த்தி கலந்துகொள்கிறார்.

‘புவிசார் அரசியல் போக்கில் சமயங்களின் நிலை’, ‘மாந்த சமுதாயத்தை ஒன்றிணைக்க புதிய வாய்ப்புகள்’, ‘சமயமும் உலகமயமும் சந்திக்கும் சவால்-சாதகம்’, ‘பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்கொள்வதில் சமய-அரசியல் தலைவர்கள்’ ஆகிய தலைப்புகளில் குழு கலந்துரையாடல் இடம்பெறும் இம்மாநாட்டின் இரண்டாம் நாளில் கசகஸ்தான் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் காசிம்-ஜொமார்ட் தொகாயேவ் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பன்னாட்டு சமயப் பேராளர்களுடன் அமைச்சர் வேதமூர்த்தியும் கலந்து கொள்கிறார்.

சமய சிந்தனை குறித்து உலகளாவிய கருத்துப் பரிமாற்றம், பன்னாட்டு சமுதாயத்தில் அமைதி-சமாதனத்தை நிலைபெறச் செய்தல், சமயங்களுக்கு இடையே பரஸ்பர மரியாதை, மற்றவர்களின் சமய நம்பிக்கையை மதித்தல் உள்ளிட்ட நோக்கங்களை முன்னிறுத்தி நடத்தப்படும் இத்தகைய பன்னாட்டு பாரம்பரிய சமய மாநாடு, இதற்கு முன், 2003-இல் இதே கசகஸ்தான் நாட்டில் நடைபெற்றது. அல்மாத்தி நகரில் நடைபெற்ற அம்மாநாட்டில், உலக சமயங்களுக்கிடையே ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் பொருட்டு பன்னாட்டு சமய நிறுவனத்தைக் கட்டமைப்பதற்கான வழிவகை குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

  • நக்கீரன்