உங்கள் கருத்து: சாலைக் கட்டணத்தை இரத்துச் செய்ய முடியாதா? அப்படியானால் குறைக்கலாமே

பிரதமர்: கட்டணமற்ற சாலைகள் சாத்தியமில்லை, அப்படி வாக்குறுதி கொடுப்பதை எதிர்த்தேன் நான்

முறையானவன்: முதலில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் “தேர்தல் அறிக்கையில் அப்படிச் சொன்னது உண்மைதான் அப்போது அரசாங்கம் எங்கள் கைக்கு வரும் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று கூறுவதை நிறுத்த வேண்டும். கேட்பதற்கே அதிர்ச்சியளிக்கிறது.

சாலைக் கட்டணத்தைப் பொறுத்தவரை அது அநியாயத்துக்கு உயர்வாக உள்ளது. ஏன்? பலருடைய பை நிறைய வேண்டுமல்லவா, அதுதான் காரணம்.

முந்தைய அரசாங்கம் செய்துகொண்ட நேர்மையற்ற ஒப்பந்தங்களை நடப்பு அரசாங்கம் மறுபரிசீலனை செய்யலாமே.

டோல் கட்டணத்தை நிச்சயமாகக் குறைக்க முடியும்.

பாக் சிக் அம்: கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். அப்படிச் செய்யாதபட்சத்தில் அது நீர்மேல் எழுத்துத்தான். அப்போது மகாதிர் அதை எதிர்த்தார் என்றால் அது எப்படி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது?

Db56f03b: டோல் கட்டணம் பிரச்னை அல்ல. டோல் கட்டணமெல்லாம் நெடுஞ்சாலைப் பராமரிப்பாளர்கள் என்ற பெயரில் மறைந்து கொண்டிருக்கும் ஒட்டுண்ணி அல்லக்கைகளைக் கொழுக்க வைப்பதை நினைத்தால்தான் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

Ex-WFW: வாக்குறுதிகள் தாமதமானால் என்ன, மெளன வாக்காளர்கள் பொறுத்துக் கொள்வார்கள். நாட்டைக் கடனில் மூழ்கடித்துக் கொண்டிருந்த அரசாங்கத்தை மாற்ற முடிந்ததே, அதைச் சொல்லுங்கள்.

பெயரிலி_1535762813: சாலைக் கட்டணங்களை நிச்சயம் அகற்ற முடியும். மகாதிர் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
சாலைக் கட்டண இரத்து என்ற வாக்குறுதி அவசரமாகக் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஒன்றாக இல்லாதிருக்கலாம். அதற்காக அதை அப்படியே விட்டுவிடக்கூடாது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுவிட்டதால் ஹரப்பான் அதை நிறைவேற்றுவதற்கு முனைய வேண்டும்.

சலாம்: ஹரப்பான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் வாக்காளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைப்பார்கள்.
குறைந்த பட்சம் சாலைப் பராமரிப்பு ஒப்பந்தங்களை மறுபரிசீலனையாவது செய்ய வேண்டும்.

டிஏபியும் அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் எதிரணியில் இருந்தபோது அதைத்தானே வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.

சாலையைப் பயன்படுத்தாதவர்கள் கட்டணம் கொடுக்க வேண்டியதில்லையே என்ற வாதாடுவதில் பொருளில்லை. இரண்டு விசயங்கள் விலை உயர்ந்தால் அன்றாடப் பொருள்களின் விலையும் உயரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே: ஒன்று பெட்ரோல், மற்றது டோல்.

பேசாய்கோங்: ஹரப்பான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் வேண்டும். சொன்ன காலத்துக்குள் செய்ய முடியவில்லை என்பதற்காக வாக்குறுதிகளைக் கைவிட்டு விடக் கூடாது.

நாட்டில் எதுவும் இலவசமாகக் கிடைக்காதுதான். வாக்குறுதிகள் சில சாத்தியமற்றவைபோல் தோன்றினாலும் அவற்றில் சில பகுதிகளையாவது நிறைவேற்றலாம். அல்லது கட்டம் கட்டமாக நிறைவேற்றலாம்.

முதல் கட்டமாக நகர்ப்புற சாலைக் கட்டணங்களை அகற்றலாம். கோலாலும்பூரில்தான் எத்தனை இடங்களில் டோல். சில இடங்களிலாவது
சாலைக் கட்டணங்களை இரத்துச் செய்யலாம்.

பெயரிலி காமுஸ்: பிகேஆர் ரபிசி ரம்லியுடன் பேசுங்கள். டோலைக் குறைப்பதற்கு அவர் கூறுவார் நல்ல ஆலோசனைகளை. முடியாவிட்டால் டோல் கட்டணத்தைக் குறையுங்கள்.

ஏபிசி123: புரோட்டோன் 2.0 பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மட்டும் பணம் இருக்கிறதா?