டெக்சி சேவையை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்- ஜாம் காட்டம்

டெக்சி ஓட்டுனர்களை “ஏமாற்றுப் பேர்வழிகள், மிரட்டிப் பணம் பறிப்பவர்கள்” என்று வருணித்த முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின், டெக்சி சேவையை முற்றாக ஒழித்துக்கட்டுவது நல்லது என்றார்.

டெக்சி ஓட்டுனர்கள் “முகம் கொடுத்துப் பேசுவதற்கு ஏற்ற மனிதர்கள் அல்லர்” என்பதால் கிரேப் வாடகைக் கார் சேவை மட்டுமே போதும் என்றாரவர்.

ஜைனுடின் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் இப்படி: “டெக்சி ஓட்டுனர்கள் லங்காவியில் (பிரதமர் டாக்டர்) மகாதிர் முகம்மட்டிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டார்கள்.

“மகாதிரிடமே இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வார்கள்?”.

அவர் நேற்று மகாதிருடனான கலந்துரையாடலில் டெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்புச் செய்த சம்பவம் பற்றிக் கருத்துரைத்தபோது அவ்வாறு கூறினார்.