பிடிபிடிஎன்னுக்குச் சம்பளத்தில் பிடித்தம் செய்வதை எதிர்த்து மாணவ ஆர்வலர்கள் கண்டன ஊர்வலம்

மாணவ ஆர்வலர்கள் சிலர், தேசிய உயர்க் கல்விக் கடன் நிதி(பிடிபிடிஎன்) தொடர்பில் அரசாங்கம் அண்மையில் எடுத்துள்ள முடிவுக்கு நாடாளுமன்றம்வரை சுமார் 8கிலோ மீட்டர் நடந்தே சென்று எதிர்ப்பைக் காட்டினர்.

பத்துப் பேர் இன்று காலை மணி 11க்குப் பட்டதாரி உடை அணிந்து மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஒன்று திரண்டனர். அங்கிருந்து அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடந்தே சென்றனர். ஒரு மணி நேரத்தில் நாடாளுமன்றம் சென்றடைந்தனர்.

பிடிபிடிஎன்னில் கல்விக் கடன் வாங்கியவர்கள் மாதம் ரிம1,000-த்துக்குமேல் வருமானம் பெற்றால் அவர்களின் சம்பளத்தில் இரண்டிலிருந்து 15விழுக்காடுவரை பிடித்தம் செய்யும் திட்டதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே மாணவ ஆர்வலர்கள் அவ்வாறு செய்தனர்.

நிதி அமைச்சர் லிம் குவான் எங் நவம்பர் 2-இல் 2019 பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தபோது அத்திட்டத்தை அறிவித்தார்.