அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளருக்கும் அவரது மகனுக்கும் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது

 

நாட்டுப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் அரிப் அப்டுல் ரஹ்மான் மற்றும் அவரது மகன் அஹமட் ஸுகைரி ஆகியோருக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.

செசன்ஸ் நீதிபதி அஸுரா அல்வி அவ்விருவரும் மொத்தம் ரிம12.6 மில்லியன் அபராதம் கட்டும்படியும் உத்தரவிட்டார்.

முகமட் அரிப்புக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் ரிம3 மில்லியன் அபராதமும் வித்திக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை.

மகன் அஹமட் ஸுகைரி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. முதல் குற்றச்சாட்டுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் ரிம3 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை. இரண்டாவது குற்றச்சாட்டுக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் ரிம6 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் பத்து ஆண்டு சிறைத் தண்டனை.

ஷரிகாட் எச்எச் குளோபல் கொன்ஸ்டரக்‌ஷன் செண்ட் பெஹாட்டிடமிருந்து ரிம70,000 மற்றும் ரிம50,000-மும் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஸுகைரிக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.

ரிம70,000 பெற்றதற்கு, அவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனையும் ரிம350,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 18 மாத சிறைத் தண்டனை.

ரிம50,000 பெற்றதற்கு, அவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனையும் ரிம250,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால், மேலும் 18 மாத சிறைத் தண்டனை.