கிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக் கண்டிக்க ஒன்றுசேராதது ஏன்?

பல கூட்டுப் பேரணிகளை நடத்தும் அம்னோவும் பாஸும் 1எம்டிபி ஊழலுக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் கண்டனம் தெரிவிப்பதிலும் ஒன்றுசேருமா என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கேட்கிறார்.

இனப் பாகுபாட்டை ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தைக் எதிர்க்க அவை கூட்டணி சேர்ந்திருப்பதை அடுத்து அவர் இவ்வாறு வினவினார்.

“அம்னோவும் பாஸும் கூடிக் குலாவுகின்றன. சனிக்கிழமை பாசிர் சாலாக்கில் ஒரு கூட்டுப் பேரணி, டிசம்பர் 8-இல் கோலாலும்பூரில் இன்னொரு மாபெரும் பேரணி.

“இதேபோல் நஜிப்புக்கும் உலகளாவிய ஊழல் அரசாங்கமாக மலேசியாவை ஆக்கி வைத்துள்ள 1எம்டிபி விவகாரத்துக்கும் கண்டனம் தெரிவிக்க அம்னோவும் பாஸும் கூட்டுப் பேரணி ஒன்றை நடத்துமா?”, என்று லிம் இன்று ஒர் அறிக்கையில் வினவினார்.

அவ்விரு கட்சிகளும் அதைச் செய்யும் என்பதற்கான அறிகுறியே இல்லை என்று கூறிய அவர், அவற்றின் தலைவர்கள் மலேசியாவுக்கு அவப்பெயரைக் கொண்டுவந்த 1எம்டிபி ஊழல் பற்றிக் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றார்.