கேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மஇகா மேல்முறையீடு செய்யாது

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மஇகா மேல்முறையீடு செய்யப்போவதில்லை.

“நீதிமன்றத்தை நாடுவதற்குப் பதிலாக மக்களிடமே முறையீடு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்”, என மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் மலேசியாகினி தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.

கேமரன் மலை காலங்காலமாக மஇகா தொகுதியாகத்தான் இருந்து வந்துள்ளது. மே மாதம் நடந்த 14வது பொதுத் தேர்தலில் சி.சிவராஜ் 567-வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் பரப்புரையின்போது வாக்காளர்களுக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறி தேர்தல் நீதிமன்றம் கேமரன் மலை தொகுதித் தேர்தல் செல்லாது என்று அறிவித்தது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுவதை சிவராஜ் மறுத்தார். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.