நாடாளுமன்றம் வராதிருக்கும் எம்பிகள் குறித்து பிரதமர் வருத்தம்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வராதிருக்கும் எம்பிகளிடம் பேசுவார். நேற்று மக்களவைக் கூட்டம் வழக்கம்போல் அல்லாமல் தாமதித்தே தொடங்கிற்று. காரணம் அவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதில் அக்கறை காட்டாமலிருப்பதைப் பிரதமர் குறைகூறினார்.
“இப்படி நடப்பது இரண்டாவது தடவை. எம்பிகளிடம் இது பற்றிப் பேச வேண்டும். தேர்தலில் போட்டியிட முந்திக்கொண்டுவரும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களுக்குப் பணியாற்றுவதில் அக்கறை காட்டாதிருப்பதுபோல் தெரிகிறது”, என்றரவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

எம்பிகள் நாடாளுமன்றம் வராமலிருப்பதை அவருக்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பாகப் பொருள் கொள்ளலாமா என்று வினவியதற்குக் குறைசொல்வதாக இருந்தால் வெளிப்படையாகவே தெரிவிக்கலாம் என்றார்.

“அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்த வேறு பல வழிமுறைகள் உண்டு. என்னைப் பிடிக்கவில்லை என்றால் நேரடியாகவே சொல்லலாம்…. என்னையும் குறைகூறலாம். தலைவர் என்றால் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்”, என்றாரவர்.