பேராக் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டில் ஜாவி எழுத்தைப் பயன்படுத்தும்

அடுத்த ஆண்டு தொடங்கி யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸ்(யுபிஎஸ்ஐ), பேராக்கில் உள்ள அதன் இரண்டு வளாகங்களிலும்- சுல்தான் அஸ்லான் ஷா வளாகம், சுல்தான் அப்துல் ஜலில் ஷா வளாகம் ஆகியவற்றில்- ஜாவி எழுத்தைத் தேசிய சொத்தாக உயர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடும்.

ஜாவி எழுத்தை வலுப்படுத்தும் கல்வி அமைச்சின் முயற்சிகளுக்கு யுபிஎஸ்ஐ உதவும் என அதன் துணை வேந்தர் முகம்மட் ஷத்தார் சப்ரான் தெரிவித்தார்.

“ஜாவி எழுத்தைத் தேசிய சொத்தாக உயர்த்தும் முயற்சியாக மாணவர் நிகழ்வுகளில் பதாதைகளிலும் பல்கலைக்கழக அறிவிப்புப் பலகைகளிலும் ஜாவி எழுத்து சேர்த்துக்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கிறேன்”, என்றாரவர்.

யுபிஎஸ்ஐ மாணவரிடையே ஜாவி எழுத்துமீது ஆர்வம் குறைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்று முகம்மட் ஷத்தார் கூறினார்.

அப்பல்கலைக்கழகத்தில் கல்வி இளநிலை (மலாய் மொழி) பட்டப் படிப்பில் ஜாவி எழுத்திலும் பயிற்சி அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

பெர்னாமா