காணொளி ஒன்றில் கிவானிஸ் பதாதையைக் கம்முனிஸ்டு கொடி என்று கூறியவரை போலீஸ் தேடுகிறது

பினாங்கு, ஜாலான் ராஜா ஊடாவில் நடைபெற்ற 2019 சிங்கே ஊர்வலக் கொண்டாட்டத்தில் கம்முனிஸ்டுக் கொடி ஒன்று ஏந்திச் செல்லப்பட்டதாக ஒரு காணொளியைப் பதிவிட்டவர் போலீசால் தேடப்படுகிறார்.

அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் அந்த ஊர்வலத்தில் கம்முனிஸ்டுக் கொடி எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர்சைனி முகம்மட் நூர் கூறினார்.

உண்மையில் கம்முனிஸ்டுக் கொடி என்று கூறப்பட்டதில் “கிவானிஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. கிவானிஸ் என்பது ஒரு தன்னார்வலர் அமைப்பாகும்.

“காணொளியில் கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை. இணையப் பயனர்களின் கவனத்தைக் கவர்வதற்காக தவறான காணொளிகளைப் பதிவிட வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறே. அது குழப்பத்தை உண்டு பண்ணும்”, என்றவர் கூறினார்.