கிட் சியாங்: போலீஸ் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், டொங் செங் மாநாட்டை மிரட்டியவர்கள்மீதும் நடவடிக்கை தேவை

போலீஸ் காஜாங்கில் இன்று நடைபெறவிருந்த தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாட்டுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றதைப்போல் மாநாட்டை எதிர்த்துக் கலவரத்தில் ஈடுபடப்போவதாக மிரட்டியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தினார்.

“தீவிரவாத தரப்பினரின் பொறுப்பற்ற மிரட்டல்களுக்கு”ப் பணிந்து போலீஸ் மாநாட்டுக்குத் தடை விதித்திருக்கக் கூடாது என்றாரவர்.

டொங் சொங் மாநாடு நடந்தால் நேரில் வந்து எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக பெர்சத்து இளைஞர் எக்ஸ்கோ உறுப்பினர் முகம்மட் அஷ்ராப் முஸ்டாகிம் முனிர் தலைமையில் அங்காத்தான் கெராக் மிண்டா மலேசியா(ஆக்ரா) உள்பட பல மலாய் அமைப்புகள் எச்சரித்திருத்திருந்தன.

“இப்போது போலீசார் நியாயமாக நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதைக் காண்பிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நடத்தப்படவிருந்த டொங் செங் மாநாட்டில் கலகம் செய்யப்போவதாக மிரட்டியவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.