‘முகிதீன் இப்போது மாறிவிட்டார்’ – முக்ரிஸ்

‘முகிதீன் இப்போது மாறிவிட்டார்’ – முக்ரிஸ்

1 எம்.டி.பி/1MDB ஊழலுக்கு எதிராக ஒரு முறை மற்றவர்களை நம்பவைத்த ஒருவர், தனது நிலைப்பாட்டை மாற்றி இப்போது அம்னோவை ஆதரிப்பது எவ்வாறு முடிகிறது என்று கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதீர் ஆச்சரியப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு அலோர் செட்டாரில் பெர்சத்து உறுப்பினர்களுடன் பேசிய முக்ரிஸ், அம்னோ தன்னை பதவி நீக்கம் செய்த பின்னரும் ஒரு பிரதமராகவும், பெர்சத்து கட்சி தலைவராகவும் இருக்கும் முகிதீன் யாசின் தனது நிலைப்பாட்டை எப்படி மாற்ற முடிகிறது என்று கேள்வி எழுப்பினார்.

1 எம்.டி.பி ஊழலில் ஈடுபட்டதற்காக தனது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை கடுமையாக விமர்சித்தார் முன்னாள் துணை பிரதமர் முகிதீன் என்று முக்ரிஸ் கூறினார்.

“நீங்களும் கூட அந்த வீடியோவை யூடியூப்பில் பார்த்தீர்கள். அதில் யார் இருந்தார்? எஸ்.ஆர்.சி, 1 எம்.டி.பி தொடர்பாக தனிப்பட்ட கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தன நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட பல்வேறு முறைகேடுகளை விவரிக்கும் டஜன் கணக்கான பதிவுகளை போட்டது நமது கட்சித் தலைவர் முகிதீன் தானே?”

திங்களன்று, அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முகிதீன் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார். கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பி.கே.ஆரால் நீக்கப்பட்ட அஸ்மின் அலி மற்றும் 10 பி.கே.ஆர் எம்.பி.க்கள் புதிய கூட்டணியில் முகிதீனுடன் இணைந்தனர்.

எவ்வாறாயினும், முகிதீன் பிரதமர் பதவிக்கு ஏங்கவில்லை என்றும் நாட்டை தொடர்ந்து பாதித்த அரசியல் நெருக்கடியில் இருந்து நிலைமையைக் காப்பாற்ற விரும்புவதாகவும் கூறினார்.

முகிதீன் தனது நிலைபாட்டை மாற்றுவதும், இப்போது அம்னோவின் கிளெப்டோக்ராடிக் தலைவர்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதும் அதிர்ச்சியாக இருப்பதாக முக்ரிஸ் நேற்று இரவு கூறினார்.

“முன்பிருந்த டான் ஸ்ரீ முகிதீன் யாசின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. தனது கடந்த காலத்திலிருந்து டான் ஸ்ரீ முகிதீன் யாசின் இப்போது எவ்வாறு வேறுபடுகிறார்?”

“அவர் இப்போது ‘மாண்புமிகு பிரதமர்’ என்று அழைக்கப்படுகிறார். அது தான் அவருடைய சாவி. பிரதமர் ஆனதும் அனைத்தும் மாறி விட்டது. அவர் பிரதமர் ஆகி யாரை கவிழ்த்தார்? அவர் வேறு யாருமல்ல. அவருக்கு முன் பிரதமராய் இருந்த ஒருவரை, நம் கட்சித் தலைவரை கவிழ்த்தார். அது அன்வார் இப்ராஹிம் அல்ல. அப்போது அன்வார் இப்ராஹிம் இன்னும் பிரதமர் ஆகவில்லை,” என்றார்.

நெருங்கிய நண்பர்களே துரோகிகள் ஆகிறார்கள்

“யாரோ ஒரு எதிரியால் அல்ல, ஆனால் திடீரென தனது கொள்கைகளை மாற்றிய ஒரு நெருங்கிய நண்பரால் துரோகம் செய்யப்படும் போது அது மிகவும் வேதனையாக உள்ளது” என்று முக்ரிஸ் கூறினார்.

மத்திய அரசைக் கட்டுப்படுத்த அம்னோவை அனுமதிக்க வேண்டாம் என்றும் கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

அம்னோ பின்னால் இருந்து செயல்படும் புதிய “Perikatan Nasional” கூட்டணி பெயரில் மயங்கிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.