பொது நடமாட்ட கட்டுப்பாடின் இரண்டாம் நாள் – இன்னும் பிடிவாதமானவர்கள் இருக்கிறார்கள்

கோவிட்-19 பாதிப்பை தடுக்கும் முயற்சியில், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூரில் காவல்துறையினர் இரண்டாவது நாளிலும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.

கிள்ளானில், பெரும்பாலான வளாகங்கள் மூடப்பட்ட போதிலும், சிலர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து செல்வதைப் பார்த்தபிறகு அங்கிருந்து வெளியேறினர்.

கிள்ளானில் உள்ள ஜாலான் பத்து தீகாவில், மூன்று பேர் கொண்ட குழு அட்டை பந்தயத்தை விளையாடுவதைக் காண முடிந்தது.

மூவரில் ஒருவரான ஒரு முதியவர், நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைப்பற்றி தெரிந்தும், காப்பாரில் இருந்து பேருந்தில் நண்பர்களை சந்திக்க வந்ததாக கூறினார்.

அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலும், ஒரு கடை வீடுகளுக்குப் பின்னால், சில வெளிநாட்டினர் ஒரு குழுவாக கூடி அமர்ந்திருந்தனர். போலீசார் அவர்களை அணுகும்போது விரைவாக கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், உணவகம் திறக்க அனுமதிக்கப்பட்ட போதிலும், மக்கள் தங்கள் வளாகத்தில் சாப்பிடுவதைத் தடுக்க நாற்காலிகளை மடித்து வைக்குமாறு உணவகங்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

கோத்தா டாமான்சாராவில், ஒரு பாத உருவு மையம் திறக்கப்பட்டு, ஒரு வாடிக்கையாளர் காவல்துறையினர் நுழைந்தபோது வெளியேறினார். காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்ட பின்னர் அவர் விரைவாக மையத்தை மூடிவிட்டார்.

அதே பகுதியில், இரண்டு உணவு லாரிகளை மூட உத்தரவிடப்பட்டது.

அவர் கோலாலம்பூருக்கும் சிலாங்கூருக்கும் இடையில் விதிகள் வேறுபட்டவை என்றும், வழக்கம்போல வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கூறினார்.

இருப்பினும், விதிமுறைகள் எல்லா இடங்களில் ஒத்திருப்பதாக காவல்துறை விளக்கமளித்தபோது, அவர் அந்த ஆலோசனையை பின்பற்றி தனது வியாபாரத்தை மூடிவிட்டார்.

இன்று காலை, சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஃபட்ஸில் அஹ்மத், நேற்றைய நடவடிக்கைகளின் அடிப்படையில், கோவிட்-19 அச்சுறுத்தல் குறித்து பலர் கவலைப்படவில்லை என்று கூறினார்.

“பொதுமக்கள் அறிவுறுத்தல்களைப் புரிந்துகொண்டு பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்”.

“இன்னும் பிடிவாதமாக இருப்பவர்கள் மீது, நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். நேற்றைய செயல்பாட்டின் அடிப்படையில், அவர்கள் இன்னும் கவலைப்படாதது போல் இருக்கிறது” என்று ஃபட்ஸில் கூறினார்.

மக்களை வீட்டில் வைத்திருப்பதற்கான முயற்சிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்துவதால் கூடுதல் பரிசோதனைகளும் சாலைத் தடைகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.