ஹுலு சிலாங்கூர், 25வது சிவப்பு மண்டலம்

ஹுலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை பாதிப்புகளை பதிவு செய்த பின்னர் கோவிட்-19 சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்தியுள்ளது.

40க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்படும். ஆரஞ்சு மண்டலங்கள் (20-40 பாதிப்புகள்), மஞ்சள் மண்டலங்கள் (1-19 பாதிப்புகள்) மற்றும் பச்சை மண்டலங்கள் (பூஜ்ஜிய பாதிப்புகள்).

முன்பு 34 பாதிப்புக்களிலிருந்து ஹுலு சிலாங்கூரில் இப்போது 43 பாதிப்புகள் உள்ளன. சிலாங்கூரில் உள்ள ஆறு சிவப்பு மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பிற மாவட்டங்கள் ஹுலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் செப்பாங் ஆகும். புதிய சிவப்பு மண்டலம் ஹுலு சிலாங்கூர் ஆகும்.

“வீட்டிலேயே இருங்கள், கூடல் இடைவெளி மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தைப் கடைபிடியுங்கள்”.

கோலா சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட் ஆரஞ்சு மண்டலத்தில் முறையே 29 மற்றும் 23 பாதிப்புகள் உள்ளன.

சிலாங்கூரில் உள்ள மற்றொரு மாவட்டமான சபாக் பெர்னாமில் 11 கோவிட்-19 பாதிப்புகள் உள்ளதால், இது மஞ்சள் மண்டலத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில் பச்சை மண்டலம் இல்லை.

தேசிய அளவில், அதிக சிவப்பு மண்டலங்களாக லெம்பா பந்தாய் (424 பாதிப்புகள்), ஹுலு லங்காட் (366 பாதிப்புகள்), பெட்டாலிங் (314 பாதிப்புகள்), கூச்சிங் (196 பாதிப்புகள்), சிரம்பான் (185 பாதிப்புகள்), குளுவாங் (175 பாதிப்புகள்) ஜோகூர் பாரு (159) பாதிப்புகள்), கிள்ளான் (152 பாதிப்புகள்), கோம்பாக் (121 பாதிப்புகள்), கெப்போங் (110 பாதிப்புகள்) மற்றும் தீத்திவாங்சா (101 பாதிப்புகள்).