நிவாரண நன்கொடை விநியோக கலந்துரையாடலில் கலந்து கொள்கிறார் பிரபாகரன்

கோலாலம்பூரில் உள்ள தாமான் செரி முர்னியில் வசிப்பவர்களுக்கு நிவாரண நன்கொடைகளை விநியோகிப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ள சமூக நலத்துறை (ஜே.கே.எம்), பத்து எம்.பி. பி பிரபாகரனுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

தன் தொகுதியில் உள்ள பல உள்ளூர்வாசிகள் உணவு உதவி கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளதாக பிரபாகரன் கூறியதைத் தொடர்ந்து அவர் இந்த அழைப்பை பெற்றுள்ளார்.

“சற்று முன், தாமான் செரி முர்னியில் வசிப்பவர்களுக்கு நிவாரண நன்கொடைகளை விநியோகிப்பது குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள ஜே.கே.எம்மில் இருந்து எனக்கு அழைப்பு கடிதம் வந்தது”.

“இது மூன்றாம் நாள் என்றாலும் உதவி விஷயங்களைப் பற்றி விவாதிக்க அப்பகுதி மக்களின் பிரதிநிதியாக என்னை அழைத்ததற்காக ஜே.கே.எம்-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்”.

“கலந்துரையாடல் கூட்டத்தில், செரி முர்னி குடியிருப்பாளர்களுக்கு போதிய உணவு பற்றாக்குறை, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள், மற்றும் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தை எட்டாத ஜே.கே.எம் உணவு உதவி போன்ற பிரச்சினைகளை நான் எழுப்புவேன்” என்று பிரபாகரன் ஒரு முகநூல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி) கீழ் வைக்கப்பட்டுள்ள கோலாலம்பூர் செலாயாங் மொத்த விற்பனை சந்தையைச் சுற்றியுள்ள சில குடியிருப்புப் பகுதிகளில் தாமான் செரி முர்னி ஒன்றாகும்.

திங்கள்கிழமை தொடங்கி 14 நாள் மூடலின் கீழ், குடியிருப்பாளர்கள் உணவு வாங்குவது உட்பட வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற உள்ளது என்பதாகத் தெரிகிறது.

அதிகாரிகள் வகுத்த விதிகளைப் பின்பற்றுமாறு பிரபாகரன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று முன்னதாக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைவர் நோர் ஹிஷாம் டஹ்லான், சந்தையைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட 16,000 பேருக்கு அரசாங்கம் உணவு வழங்குவதாக உறுதியளித்தார்.

பிரபாகரனைத் தவிர, கோலாலம்பூர் காய்கறி மொத்த விற்பனையாளர்கள் சங்கமும் அங்கு பி.கே.பி.டி உத்தரவின் கீழ் வசிப்பவர்களுக்கு வாக்களித்தது போல உணவு உதவி எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.