கோவிட்-19: செப்பாங் குடிநுழைவு தடுப்பு முகாமில் புதிய திரளை

மலேசியாவில் மேலும் 60 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,245 ஆக உள்ளது.

நண்பகல் நிலவரப்படி, மேலும் 33 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,945 அல்லது மொத்த நிகழ்வுகளில் 82 சதவீதமாகக் உள்ளது.

குணப்படுத்தப்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,185 ஆகும்.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 7 பாதிப்புகள் வெளிநாட்டு நோய்த்தொற்றுகள் என்றும் அவை இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் டிவிட்டரில் விளக்கினார்.

“53 உள்ளூர் தொற்று பாதிப்புகளில், 44 மலேசியரல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். அவற்றில் 27 பாதிப்புகள் செமெனியில் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாமில் மற்றும் செப்பாங் குடிநுழைவு தடுப்பு முகாமில் ஒரு புதிய திரளையில் ஆறு (6) பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.”

“ஒன்பது நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது,” என்று நூர் ஹிஷாம் கூறினார்.

இன்று இறப்பு ஏதும் பதிவாகவில்லை என்றும், மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது என்றும் நூர் ஹிஷாம் இன்று கூறினார்.

ஹரி ராயா கொண்டாட்டத்திற்கான சந்தர்ப்பத்தை வழங்க இன்று எந்த ஊடக மாநாடும் இல்லை.