கோவிட் – 19: 847 புதிய பாதிப்புகள், 5 இறப்புகள், 90 பேர் அவசரப் பிரிவில்

இன்று மதியம் வரை, நாட்டில் 847 கோவிட்-19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

578 புதியத் தொற்றுகளுடன் சபா தொடர்ந்து அதிகப் பாதிப்புகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. 132 பாதிப்புகளுடன் சிலாங்கூரும், 38 பாதிப்புகளுடன் நெகிரி செம்பிலானும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

சபா, சிலாங்கூர், லாபுவான், புத்ராஜெயாவைத் தொடர்ந்து கோலாலம்பூரிலும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று, புத்ராஜெயாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 486 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதற்கிடையே, 90 நோயாளிகள் அவசரப்பிரிவில் இருப்பதாகவும், அவர்களில் 29 பேருக்கு சுவாசக் கருவி தேவைப்படுவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

“இன்று 5 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர், ஆக, நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 204-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் ஐவர் சபாவையும் ஒருவர் கெடாவையும் சேர்ந்தவர்கள். அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள்.

இன்று, பிற மாநிலங்களில் பதிவாகியுள்ளப் புதியத் தொற்றுகள் :- லாபுவானில் 29, பேராக்கில் 14, பினாங்கில் 10, புத்ராஜெயாவில் 4, கெடா, கிளாந்தான் மற்றும் மலாக்காவில் 3, பஹாங்கில் 2, ஜொகூர் மற்றும் சரவாக்கில் 1.

இன்று, 6 புதியத் திரளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.