7 மாத எம்.சி.ஓ. காலத்தில், கிட்டத்தட்ட 4,000 வழக்குகளை எம்.ஏ.சி.சி. பெற்றது

மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பணியில் இருந்த அரசு ஊழியர்களால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 3,919 அறிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) பெற்றுள்ளது.

அந்த எண்ணிக்கையில், ஆக அதிகமான வழக்குகள் ஜூலை மாதத்திலும் (962), ஆக குறைந்த வழக்குகள் மே மாதத்திலும் (275) பதிவாகியுள்ளன.

மார்ச் மாதத்தில் 510, ஏப்ரல் மாதத்தில் 279, ஜூன் மாதத்தில் 758, ஆகஸ்டில் 542, செப்டம்பரில் 593 வழக்குகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

தெரசா கோக் (பி.எச்.-செப்புத்தே) எம்.பி.யின் கேள்விக்கு, பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹாசன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

எவ்வாறாயினும், எம்ஏசிசி-க்கு வழங்கப்பட்ட அறிக்கை குறித்த கூடுதல் விவரங்களைத் தக்கியுதீன் வழங்கவில்லை.

ஆகஸ்ட் மாதம், சுங்கை பூலோவில் சட்டவிரோத வணிக வளாகங்களைப் பாதுகாப்பதற்காக இலஞ்சம் வாங்கியக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், ஷா ஆலம் நகரசபை (எம்.பி.எஸ்.ஏ) ஊழியர்கர் ஒன்பது பேரையும் ஒரு வர்த்தகரையும் எம்.ஏ.சி.சி. கைது செய்தது.