தனது வலைத்தளம் ஊடுருவப்பட்டதை ஏ.டி.எம். உறுதிசெய்தது

நேற்று தனது தரவு வலையமைப்பில் இணையத் தாக்குதல் நடந்ததை மலேசிய ஆயுதப்படை (ஏ.டி.எம்.) உறுதிப்படுத்தியது.

ஏடிஎம் தளபதி ஜென் அஃபெண்டி புவாங், இந்தச் சம்பவத்தைப் பாதுகாப்பு சைபர் மற்றும் மின்காந்த பிரிவு (பி.எஸ்.இ.பி.) மற்றும் ஏடிஎம் சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் (சி.டி.ஓ.சி.) கண்டறிந்துள்ளது என்றார்.

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் ஆரம்பத்திலிருந்தே வலைத்தளத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சில பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன, அவை போர்ட்டலின் உண்மையான செயல்பாட்டைப் பாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

“தாக்குதல் தொடங்கியதும், பி.எஸ்.இ.பி. மற்றும் சி.டி.ஓ.சி. வகைப்படுத்தப்பட்ட தரவின் உண்மையான இருப்பிடத்தை மறைக்கும் வகையில், தரவு போக்குவரத்து பிரிப்பைச் செயல்படுத்தி ஊடுருவிகளால் குறிவைக்கப்பட்டப் பிணையத்தைப் பாதுகாத்தனர்.

“பாதுகாப்பு அமைச்சு (மைண்டெஃப்) மற்றும் ஏடிஎம் நிறுவனங்களுக்குச் சொந்தமான தகவல் வலைத்தளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ஏடிஎம் அறிந்திருக்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு வலையமைப்பைச் சீர்குலைக்கும் அனைத்து அச்சுறுத்தல்களையும் முன்கூட்டியே கண்டறிந்து, ஒழுங்காக கையாள ஏடிஎம்மின் இணையப் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதும் தயாராக உள்ளன,” என்று அஃபெண்டி வலியுறுத்தினார்.

நேற்று, ஏடிஎம் வலைத்தளம் பொறுப்பற்ற தரப்பினரால் மதியம் 12 மணியளவில் அநாகரீகமான படங்களைக் காண்பித்ததன் மூலம் ஊடுருவப்பட்டதாக நம்பப்படுகிறது.

-பெர்னாமா