ஜொகூர் அம்னோ : பாகோவைத் தற்காக்க முஹைதீனுக்கு வழிவிடுவோம்

15-வது பொதுத் தேர்தலில், பாகோ தொகுதியைத் தற்காத்துகொள்ள பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசினுக்கு வழிவிட தயாராக இருப்பதாக, ஜொகூர் அம்னோ கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளது.

இத்தகவலை ஜொகூர் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். இந்தத் திட்டம் ஏற்கனவே கட்சித் தலைமைக்குச் சமர்ப்பிக்கப் பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஆதாமின் கூற்றுப்படி, பிரதமராக நாட்டை நிர்வகிப்பதில் முஹைதீனின் அனுபவமும் செயல்திறனும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது கணக்கில் எடுத்துகொள்ளப்படும் என்றார்.

எனவே, தேசியக் கூட்டணியின் (பி.என்.) முயற்சிகள் மற்றும் பிரதமரின் பணிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“ஜிஇ15-இல், முஹைதீன் பாகோவில் தொடர்ந்து போட்டியிட நாங்கள் வழி விட விரும்புகிறோம் என்று ஜொகூர் அம்னோ உயர்தலைமைக்குத் தெரிவித்துவிட்டது,” என்று அவர் கூறினார்.