நீதிமன்ற அவமதிப்பு : மலேசியாகினிக்கு RM500,000 தண்டம் விதிக்கப்பட்டது

மலேசியாகினி இணையத்தள செய்தி நிறுவன வாசகர்களின் கருத்துகள், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, RM500,000 தண்டம் விதிக்கப்பட்டது.

இன்றைய வழக்கு விவகாரத்தின் போது, ஃபெடரல் நீதிமன்றம் அத்தண்டனையை வழங்கியது.

முன்னதாக 6 -1 என்ற பெரும்பான்மை முடிவில், தனது வாசகர்களின் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளுக்கு மலேசியாகினி பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதிகள் குழு கூறியது.

இருப்பினும், பெரும்பான்மையினர், அதே குற்றச்சாட்டில் செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் குற்றவாளி அல்ல என்று முடிவு செய்தனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரோஹானா யூசுப் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு, 6-1 பெரும்பான்மை முடிவை வழங்கியது, ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி பி நலினி இந்த முடிவுக்கு உடன்படவில்லை.

தனது 21 ஆண்டு வரலாற்றில், மலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானது இதுவே முதல் முறை.

கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி, சட்டத்துறைத் தலைவர் இட்ரிஸ் ஹருன், செய்தி நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.

இன்று, இந்தத் தீர்ப்பை வழங்கிய ரோஹனா, நீதிமன்ற அவமதிப்பு, மலேசிய நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது என்றார்.

“தாக்குதல் அறிக்கைகள் (கருத்துகள்) நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாகப் பரவியுள்ளன, அவற்றின் உள்ளடக்கம் பொய்யானது, அவதூறானது, அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கியது.

“RM500,000 தண்டம் நியாயமானது என்று நாங்கள் நினைக்கிறோம்.

“பிரதிவாதி, திங்கள்கிழமை (அடுத்த வாரம்) தொடங்கி மூன்று நாட்களுக்குள் தண்டத்தைச் செலுத்த உத்தரவிடுகிறோம்,” என்று ரோஹானா கூறினார்.