தடுப்பூசி நியமனங்களைப் பலர் தவறவிட்டனர்

கோவிட் -19 தடுப்பூசி திட்டம், ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 150,000 மருந்தளவு ஊசி செலுத்தும் இலக்கை நெருங்குகிறது.

இருப்பினும், தடுப்பூசி பெறக் கையெழுத்திட்ட பலர் தங்கள் நியமனங்களைத் தவறவிட்டனர்.

இன்று சமூக ஊடகப் புதுப்பித்தலின் போது, கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாதச் சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி), நேற்று மொத்தம் 99,552 மருந்தளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகக் கூறியது.

அந்த எண்ணிக்கையில் 68,958 முதல் மருந்தளவு, மீதமுள்ளவை இரண்டாவது மருந்தளவு ஆகும்.

நாடு முழுவதும், 45.6 விழுக்காடு பெரியவர்கள் தடுப்பூசி திட்டத்திற்குப் பதிவு செய்துள்ளனர்.

இன்னும் பலர் தங்கள் நியமனங்களுக்கு ஏற்ப வரமுடியாதபோது பிரச்சினைகள் எழுகின்றன.

நியமனம் வழங்கப்பட்ட 30,100 பேரில், 10,827 பேர் ஏப்ரல் 19 முதல் கடந்த சனிக்கிழமை வரை தடுப்பூசி பெற வரவில்லை என்று கெடா மாநிலச் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் மொஹமட் ஃபிக்ரி உஜாங் கூறியதாக ஹரியான் மெட்ரோ இன்று தெரிவித்துள்ளது.

அவர்கள் வராததற்கு ஒரு காரணம், அவர்களின் மனதை மாற்றிக்கொள்வதும், தடுப்பூசி பெறத் தயாராக இல்லாததும் ஆகும்.

“அதுமட்டுமின்றி, தடுப்பூசி மையத்திற்கு வர அவர்களிடம் வாகனம் இல்லை என்றும், சிலர் கடைசி நிமிடத்தில் தேதியை மாற்ற விண்ணப்பித்ததாகவும் அவர்கள் கூறினர்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், அத்தடுப்பூசிகள் தற்போது காத்திருப்பு பட்டியலில் உள்ள மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் மொஹமட் ஃபிக்ரி தெரிவித்தார்.

கிளாந்தானில், மைசெஜாத்தெரா பயன்பாட்டைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெறாததும், மூத்தக் குடிமக்கள் தடுப்பூசி பெறுவதற்கான நியமனங்களில் கலந்துகொள்ளத் தவறியதற்கு ஒரு காரணம்.

நேற்று, கெத்தாரே நாடாளுமன்ற உறுப்பினர் அன்னுவார் மூசா தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் பங்கேற்க மாநில மக்களை வற்புறுத்தினார்.