‘அரசாங்கம் மக்களிடம் சிறை வார்டனைப் போல நடந்துகொள்கிறது’ – ஹன்னா

விரிவான நிதி உதவி அறிவிக்கப்படாமல், முழு கதவடைப்பை நீட்டிப்பதை செகாம்புட் எம்.பி. ஹன்னா இயோ விமர்சித்தார்.

இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல் என்று ஹன்னா ஓர் அறிக்கையில் விவரித்தார்.

“2 வார முழு கதவடைப்பையே, நம்மால் சமாளிக்க முடியவில்லை, இருப்பினும் கோவிட் -19 தொற்றின் நேர்மறை நேர்வுகளைல் குறைக்க, முழு கதவடைப்பை மேலும் நீட்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

“சிறை வார்டன்களைப் போல அரசாங்கம் நடந்து கொள்ளக்கூடாது, மக்களை வீட்டுச் சிறைகளில் அடைத்து, அரசாங்கத்தின் திறமையின்மையாலும், குழப்பமான, முரண்பாடான மற்றும் அபத்தமான எஸ்.ஓ.பி.க்களின் பங்களிப்பாலும் உயர்ந்துவரும் கோவிட் நேர்வுகளுக்கு மக்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள், பிரச்சினையைச் சமாளிக்க நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் நிதி உதவிகளை அறிவிப்பார் என்று நம்புகிறார்கள் என்றார் அவர்.

“ஆனால் அது நடக்கவில்லை. எத்தனை சாக்கு அரிசியை நாம் தொடர்ந்து கொடுக்க முடியும்? இன்னும் எத்தனை உணவு கூடைகளை நாம் விநியோகிக்க வேண்டும், இன்னும் எத்தனை வாரங்களுக்குச் செய்ய வேண்டும்?” கேள்வி.

பெரும் ஆபத்தில் சிறு தொழில்துறைகள்

“சில நாட்களுக்கு முன்பு நான் உணவு வாங்க ஒரு பேரங்காடிக்குச் சென்றேன், பிறகு பழங்கள் வாங்க ஒரு பழக்கடையில் நுழைந்தேன்.

“பழம் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுவதை நான் கண்டது இதுவே முதல் முறை, ஏனென்றால் பழங்கள் புதியவையல்ல, மேலும் நான் மட்டுமே அங்கு வாடிக்கையாளராக இருந்தேன்.

“நான் அவர்களின் எஞ்சியப் பழங்கள், வாடகை மற்றும் பணியாளர்களுக்கான சம்பளம் பற்றி யோசித்தேன். நான் இன்னும் இலாபம் அல்லது தாக்கத்தைப் பற்றி பேசவில்லை,” என்று அவர் கூறினார்.

பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் செயற்பாட்டில் இல்லை என்றும், நீண்ட காலம் காத்திருந்து, அணுகும் முறையைப் பின்பற்றுவதாகவும் அவர் கூறினார்.

“நாம் இப்போது அதிக வேலை இழப்புகள் நிகழாமல், வணிகக் கடைகளை மூடாமல் தடுப்பதைப் பற்றி பேசுகிறோம். அரசாங்க உதவிகள் பி40-ஐ மட்டுமே குறிவைக்கின்றன.

“சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எஸ்.எம்.இ.) உரிமையாளர்களான, பெரும்பாலும் எம்40 குழுவைச் சார்ந்தவர்களுக்கு எதுவும் இல்லை. எம்40 குழுவினருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் போது, தி20-ஆல் சுவாசிக்க முடியாது.

“எஸ்.எம்.இ.-க்கள் இப்போது உதவி கேட்கும் இறுதி கட்டத்தில் உள்ளன,” என்று அவர் கூறினார்.