எம்.பி:  அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு அகோங்கிற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளாரா?

நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டுவரப்படாமல் பிரதமர் முஹைதீன் யாசின், அவசரகால கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளாரா? என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் கேள்வி எழுப்பினார்.

“அவசர கட்டளைகளை ரத்து செய்யுமாறு யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளாரா?”

“பதில் ஆம் என்றால், அடுத்த கேள்வி, அவசரகால கட்டளைகளை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கும் எந்தவொரு ஆவணத்திலும் அல்லது கடிதத்திலும் யாங் டி-பெர்டுவான் அகோங் கையெழுத்திட்டாரா?”  என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசன் நேற்று தேவான் ரக்யாட்டை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஜூலை 21 முதல் நடைமுறைக்கு வந்த ஆறு அவசர கட்டளைகளை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வராமல் ரத்து செய்ததாக அறிவித்தார்.

அரசியலமைப்பின் படி நாடராளுமன்றத்தின் மூலம் செய்யப்பட வேண்டிய ரத்து, கடுமையான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

அவசரகால கட்டளைகளை ரத்து செய்வது அரசாங்க அரசிதழில் பதிவு செய்யப்பட்டதா? என்று ஹசன் கேள்வி எழுப்பினார்.

அவசர கட்டளை, மற்றவற்றுடன், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனையை RM1,000 இலிருந்து RM50,000 ஆக உயர்த்தியது.

தக்கியுதீன் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியிருந்தால்,  அவர் ராஜினாமா செய்வது ஒரு கண்ணியமான நடவடிக்கை என்று ஹசன் கூறினார்.

“அவர் மறுத்துவிட்டால், குறைந்தபட்சம் நாடாளுமன்றக் குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு தகவல் தெரிவிக்கப்படாவிட்டால், ஆலோசிக்கப்படாவிட்டால், அவசரகால கட்டளைகளை ரத்து செய்ய அவரது ஒப்புதல் கோரப்படாவிட்டால், அது பிரதமரும் முழு அமைச்சரவையும் அரசியலமைப்பையு மீறுவதாகும்.

“அப்படியானால், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற கொள்கையின் கீழ், அமைச்சரவையும் பிரதமரும் எடுக்க வேண்டிய கண்ணியமான நடவடிக்கை  பதவியை ராஜினாமா செய்வதே ஆகும்” என்று அவர் கூறினார்.